குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: சோகத்திலும் சோகம்.. 9 பேரை அடையாளம் காண்பதில் சிக்கல்.. என்ன பிரச்சனை?
ஊட்டி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 9 பேரின் அடையாளத்தை காண்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உடல் மொத்தமாக தீயில் கருகிவிட்டதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் முன் ஏற்பட்ட இந்த விபத்தில் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு 80% தீக்காயத்துடன் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகம்
இவரின் முகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தீ காயம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்களை கொண்டு அவரின் முகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரின் உடலை சீரமைப்பதில் 8 மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவரை மேல் சிகிச்சைக்காக நேற்றுதான் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் அழைத்து சென்றனர்.

சோகம்
இந்த விபத்தில் சோகத்திலும் சோகமான செய்தி 2 பேரை தவிர மற்றவர்களின் உடல் அடையாளம் காணப்படவில்லை. 13 பேர் பலியான நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் உடல் மட்டுமே முதலில் அடையாளம் காணப்பட்டது. அதன்பின் பிரிகேடர் எல்எஸ் லிட்டர் உடல் அடையாளம் காணப்பட்டது.

உடல் அடையாளம்
இந்த நிலையில் இதுவரை மொத்தமாக 4 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்னும் 9 பேரின் உடல் அடையாளம் காணப்படவில்லை. 9 பேரின் அடையாளத்தை காண்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உடல் மொத்தமாக தீயில் கருகிவிட்டதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முகம், உடலின் பல்வேறு பாகங்கள் மொத்தமாக கருகிவிட்டதால் நெருங்கிய உறவினர்களே உடலை வைத்து அடையாளம் காண முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

சோதனை
அதே சமயம் பலியானவர்களின் உறவினர்கள் குத்துமதிப்பாக சிலரின் உடலை இதுவரை அடையாளம் காண்பித்துள்ளனர். உயரம், தோற்றம் இதை வைத்து உடல்களை அடையாளம் காண்பித்துள்ளனர். ஆனால் இதையும் உறுதிப்படுத்த முடியாத நிலை இருப்பதால் அறிவியல் பூர்வமாக உடலை பரிசோதனை செய்ய உள்ளனர்.

அறிவியல் சோதனை
கை ரேகை, ரத்த மாதிரி உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். முழுமையாக உடலை அடையாளம் கண்ட பிறகே அதை உறவினர்களுக்கு வழங்குவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சிலருக்கு உடல் முழுவதும் கருகிவிட்டதால் இதிலும் சிக்கல் இருக்கிறது. எனவே சிலரின் உடலை அடையாளம் காண தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications