இதென்ன கடா மீசை? கண்டித்த நீதிபதி.. நெளிந்த “போலீஸ்” - சிங்கம் சூர்யாபோல் வந்தவருக்கு குட்டு
நீலகிரி: மாவட்ட நீதிமன்றத்தில் சிங்கம் சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீசை நீதிபதி கண்டித்ததால் அவர் மீசை திருத்திக்கொண்டு வந்தது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதி. அங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராஜேஷ் கண்ணன் சிங்கம் சூர்யாபோல் மீசையை வைத்திருந்தார். இந்த நிலையில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நீலகிரி மாவட்ட அமர்வு முன் காவலர் ராஜேஷ் கண்ணன் ஆஜராகினார்.
அப்போது அவரை கண்ட நீதிபதி முருகன், இதுபோல் மீசை வைக்க உயர் அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவித்து இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். தகவல் தெரிவிக்கவில்லை என்றால் மீசையை திருத்தம் செய்யுமாறும் நீதிபதி அவரை கண்டித்தார்.

அதிர்ச்சியடைந்த காவலர் ராஜேஷ் கண்ணன், நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்று சலூன் கடையில் மீசையை முறையாக வெட்டி சரிசெய்துவிட்டு நீதிமன்றம் வந்தார். இதன் காரணமாக நீலகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சிங்கம் படம் வெளியான பிறகு போலீசார் பலர் அதை தங்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தடாலடியான நடவடிக்கைகளில் இறங்குவதும், மீசையை அவரை போன்றே வைத்துக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டனர். படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த முறை இன்னும் மாறவில்லை.
ஊருக்கு ஒரு காவலர் சிங்கம் சூர்யாவைபோல் கடா மீசை வைத்துக்கொண்டிருப்பதை காண முடியும். "காவல்துறையில் உள்ள காவலர்கள், அதிகாரிகளின் தோற்றம் அடையாள அட்டையில் இருப்பதைபோன்றே இருக்க வேண்டும். அதற்கு மாறாக போலீசார் மொட்டை அடிப்பதாகவோம், பெரிய மீசை வைப்பதாகவோ இருந்தால் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்." என காவல் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications