சிக்கல் தீர்ந்தது! நீலகிரியில் ஆ.ராசா வேட்பு மனு ஏற்பு.. அதிமுக வேட்பாளரின் மனுவும் ஏற்பு!
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மறுபரிசீலனைக்குப் பிறகு இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் துவங்கியது. வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) நிறைவடைந்தது. மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் ஜாதி சான்றிதழ் குறித்து சில சந்தேகங்களை எழுப்பி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி (தனி) தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் வேட்பு மனு பரிசீலனையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேசமயம் திமுக வேட்பாளர் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் ஆ.ராசா வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. நீலகிரி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. நீலகிரியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மறு பரிசீலனைக்குப் பிறகு இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications