நரைமுடி.. “அங்க நிற்காதப்பா.. நகரு..” திமுக கவுன்சிலரை வெளியேற்றிய மா.செ - ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சை!
நீலகிரி : இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நரை முடி இருந்ததால் இளைஞரணி நிர்வாகியை புகைப்படத்தில் நிற்க வேண்டாம் எனக் கூறிய நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி நகராட்சி கவுன்சிலரான திமுக இளைஞரணி நிர்வாகியை, குரூப் போட்டோவில் நிற்க வேண்டாம் என திமுக மாவட்ட செயலாளர் மைக்கிலேயே கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முடி நரைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, புகைப்படத்தில் இருக்க வேண்டாம் என திமுக மாவட்ட செயலாளர் முபாரக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் பேச்சால் அதிருப்தி அடைந்த அந்த நிர்வாகி அங்கிருந்து வெளியேறினார்.

திமுக ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை எதிர்த்தும், நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் தி.மு.க இளைஞர் அணி - மாணவரணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் உள்ள சுதந்திர தின நினைவுத் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்தும், மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசை எதிர்த்தும் திமுகவினர் முழக்கம் எழுப்பினர்.

இளைஞரணி நிர்வாகியை நகரச் சொன்ன மா.செ
கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவடையும் நேரத்தில் திமுக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் குழுவாக நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக், நரை முடியுடன் இருந்த இளைஞரணி நிர்வாகி ஒருவரை குழு புகைப்படத்தில் இருந்து வெளியேறுமாறு மைக்கிலேயே கூறினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த நிர்வாகி அங்கிருந்து நகர்ந்தார்.

டை அடிக்கல போல
மைக்கில் பேசிய நீலகிரி திமுக மாவட்ட செயலாளர் முபாரக், "கவுன்சிலர் கஜேந்திரன் டை அடிக்க மறந்துவிட்டார் போல. இப்படி நகர்ந்து நம்ம பக்கம் வாங்க.. இப்ப போட்டோ எடுங்க.. இப்ப எப்படி இருக்கு பாருங்க.. முழுக்க இளைஞர்கள்.. ஒரே ஒருத்தர் நின்றுவிட்டாலும் தனியாக தெரிகிறது. கஜேந்திரன் கோவிச்சுக்காதீங்க.." எனப் பேசினார்.

தொண்டர்கள் அதிர்ச்சி
ஊட்டி நகராட்சி கவுன்சிலரான கஜேந்திரனுக்கு 35 வயது. அவர் ஊட்டி நகர திமுக இளைஞரணியில் துணை அமைப்பாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நரை முடி இருப்பதால் அவரை இளைஞரணியினரோடு புகைப்படத்தில் நிற்க வேண்டாம் என மைக்கில் கூறிய மாவட்ட செயலாளர் முபாரக்கின் செயல் அங்கிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications