ஒரு யானையை காப்பதற்காக.. போன் போட்ட சிஎம் ஆபிஸ்.. மொத்தமாக இறங்கிய அரசு இயந்திரம்.. நெகிழும் நீலகிரி
நீலகிரி: நீலகிரியில் அடிப்பட்ட யானை ஒன்றை காப்பாற்றுவதற்காக மொத்த அரசு இயந்திரமும் களமிறங்கி பணியாற்றிய சம்பவம் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது யானை வழித்தடங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முக்கியமாக கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணிகளை துரிதமாக செய்து வருகிறார்கள்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஒரு பக்கம் இந்த பணிகளை கவனித்துக் கொண்டு இருக்கிறார். கோவை முன்னாள் ஆட்சியர் நாகராஜனுக்கு இதற்காக நில அளவை ஆணையர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கவனம்
இந்த நிலையில்தான் நீலகிரியில் அடிப்பட்ட யானை ஒன்றை காப்பாற்றுவதற்காக மொத்த அரசு இயந்திரமும் களமிறங்கி பணியாற்றிய சம்பவம் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி அருகே கூடலூரில் இந்த யானை காயம் பட்டு உள்ளது. ஆனால் இந்த சம்பவம் வனத்துறைக்கு தாமதமாகவே தெரிய வந்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் யானையின் பின் பக்கம் சின்ன காயம் ஏற்பட்டு இருக்கிறது,

பெரிதானது
அதன்பின் அந்த காயம் பெரிதாக பெரிதாக, யானையின் பின்பக்கம் வெடித்து, துடித்தபடி எங்கும் நகராமல் காட்டுக்குள்ளேயே கிடந்தது. இந்த தகவல் புதிதாக பதவி ஏற்ற வனத்துத்துறை அமைச்சருக்கு சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை
யானையின் பின் பக்கத்தில் அடிபட்டு, அந்த யானை உயிருக்கு போராடி இருக்கிறது. இப்படியே விட்டால் காயம் பெரிதாகி யானை மேலும் பாதிப்படையும் வாய்ப்புகளும் உள்ளன. இது அந்த யானையின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும். இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் இங்கே அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். மருத்துவர்களும் இங்கே அனுப்பப்பட்டுள்ளனர்.
|
தகவல்
அதேபோல் முதல்வரின் தனிப்பட்ட பிரிவிற்கும் இந்த தகவல் சென்றுள்ளது. உடனே முதல்வர் அலுவலகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகளுக்கு போன் சென்று, உடனே அந்த யானை மீட்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. யானையை மீட்கும் வரை தொடர்ந்து பல முறை இது தொடர்பான அப்டேட்களை வனத்துறை அதிகாரிகளிடம் முதல்வரின் தனிப்பிரிவு கேட்டுள்ளது.
|
எப்படி
ஆனால் இந்த யானையை காயம் காரணமாக கோபமாக இருந்துள்ளது. அருகில் வரும் நபர்களை அனுமதிக்காமல் கொஞ்சம் மூர்க்கமாக இருந்துள்ளது. அடர்ந்த காடு என்பதால் யானையை அணுகுவதில் சிரமம் இருந்துள்ளது. கடைசியில், பலா பழத்தில் உணவு கொடுப்பது போல மருந்தையும் சேர்த்து கொடுத்து அருகே இருந்து யானையை கவனித்து இருக்கிறார்கள்.

நேரடி
வனத்துறை அதிகாரிகள் பலரும் நேரடியாக களமிறங்கி யானையை அருகில் இருந்து கவனித்து இருக்கிறார்கள். சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு இந்த பணிகளை மேற்பார்வையிட்டார். இதையடுத்து யானை கொஞ்சம் எழுந்து நிற்கும் அளவிற்கு வந்த நிலையில், அருகில் சென்று யானைக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மீட்பு
காயத்தில் இருந்து தற்போது லேசாக மீண்டு உள்ள யானைக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் உடனே முகாம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. காட்டில் இருந்து முகாமிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த யானை விரைவில் குணமடையும் என்று சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு உறுதி அளித்துள்ளார். ஒரு யானையை காப்பதற்காக வனத்துறை அதிகாரிகள், அமைச்சர், ஐஏஎஸ், சிஎம் செல் என்று எல்லோரும் களமிறங்கியது நீலகிரி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications