குன்னூர் பேருந்து விபத்துக்கு காரணம்.. அந்த நபர்தான்.. நேரில் பார்த்தவர் பேட்டி
குன்னூர்: குன்னூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடியாதவர்களுக்கு வியாழக்கிழமை, சனி, ஞாயிறு, திங்கள் என 4 நாட்கள் விடுமுறையாகும். இவர்கள் நடுவில் வெள்ளிக்கிழமை மட்டும் லீவு போட்டால் போதும் 5 நாட்கள் கிடைக்கும்.

இந்த 5 நாட்களில் எங்காவது சுற்றுலா செல்லலாம். அந்த வகையில் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து 54 பேர் உதகைக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர். அங்கு சில இடங்களை சுற்றி பார்த்துவிட்டு குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று வீடு திரும்பினர். அப்போது பேருந்து மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் பேருந்து மோதியது.
இது மோதிய வேகத்தில் அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் இருள் சூழ்ந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.
இந்த மீட்பு பணிகளால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து நேரில் பார்த்தவர் கூறுகையில், மாலை 5.15 மணி இருக்கும். அப்போது நாங்கள் அந்த பேருந்துக்கு பின்னாடிதான் வந்து கொண்டிருந்தோம். தென்காசியிலிருந்து சுற்றுலா வந்தவர்களின் பேருந்து கீழே இறங்கி வந்த போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
அந்த பேருந்தில் இரு டிரைவர்கள் இருந்தனர். ஒரு டிரைவர் வெளியே குதித்துவிட்டார். இன்னொருவர் இறங்கி வருகிறார். மேலே இருந்து வரும் போதே பிரேக் பிரச்சினை ஏற்பட்டது என்று சொன்னார்கள். கீழே இறங்கும் போது வளைவில் கன்ட்ரோல் செய்ய முடியாமல் அப்படியே வாகனத்தை விட்டுவிட்டார். இந்த மாற்று டிரைவரால்தான் விபத்து நடந்தது.
மேலே பிரேக் பிரச்சினை ஆன போதே இன்னொருவர் டிரைவர் தான் ஓட்டுவதாக கேட்டாராம். ஆனால் ஓட்டி வந்த டிரைவர்தான் வேண்டாம், நான் மேட்டுப்பாளையத்தில் தருகிறேன் என கூறிவிட்டாராம். இவ்வாறு விபத்தை நேரில் பார்த்தவர் கூறினார்.












Click it and Unblock the Notifications