கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு
கூடலூர்: கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கேரளாவில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக பெய்தது. அதிலும் சில நாட்கள் மட்டும் பெய்துவிட்டு அதன் பிறகு ஏமாற்றிச் சென்றது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குறைவான மழைப் பொழிவே கிடைத்தது.

பெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்து வந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அதே நேரம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் எற்பட்டது.
தற்போது, கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 945 கனஅடியில் இருந்து 1,395 கனஅடியாக அதிகரித்துள்ளது. 112 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், 113.10 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கம்பம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, இடுக்கி, கன்னூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நாளை மற்றும் வரும் நாளை மறுநாள் வரை கனமழை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications