கொடநாடு கொலை வழக்கில் திருப்பம்! பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன் போட்ட நீதிபதி
நீலகிரி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், பங்களாவை ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியை அடுத்த கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா ஒன்று இருக்கிறது. இந்த கொடநாடு பங்களாவில் தான் ஜெயலலிதா எப்போதும் ஓய்வெடுப்பார்.

குறிப்பாகக் கோடைக் காலங்களில் ஆட்சியில் இருந்தாலும் கூட அவர் கொடநாடு பங்களாவில் தான் ஓய்வெடுப்பார். ஜெயலலிதா இறந்த பின் கொடநாடு பங்களாவில் யாரும் வசிக்கவில்லை. வாட்ச்மேனும் சில ஊழியர்களும் மட்டுமே இருந்தனர்.
கொடநாடு: இந்தச் சூழலில் தான் கடந்த 2017இல் கொடநாடு பங்களாவில் யாருமே எதிர்பார்க்காத பல பகீர் சம்பவங்கள் அரங்கேறின. அந்தாண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அப்போது கொடநாடு பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அங்கே கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது.. இந்தச் சம்பவத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் இணைந்து செய்ததாகக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்த போதே கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், இது குறித்த வழக்கு நீலகிரி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
சிபிசிஐடி: இந்த வழக்கை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான 49 பேரைக் கொண்ட குழு விசாரித்து வருகிறது. மேலும், இதுவரை சிபிசிஐடி போலீசார் 189 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த போது கனகராஜ் செல்போன் டவரில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், கனகராஜின் செல்போனும் குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று விசாரணை: கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் வாளையாா் மனோஜ் மட்டும் ஆஜரானார். அப்போது குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரான விஜயன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதாவது சம்பவம் நடந்த இடத்தை தாங்கள் பார்வையிட வேண்டும் எனக் கூறி அதற்கு அனுமதி கேட்டிருந்தார்.
இதையடுத்து இது குறித்து பதில் அளிக்குமாறு கூறி நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நடந்த இடத்தை பார்வையிட அனுமதி கோரிய குற்றஞ்சாட்டப்பட்டோரின் மனுவுக்குப் பதில் அளிக்கத் தமிழ்நாடு அரசு கூடுதல் கால அவகாசம் கோரிய நிலையில், அதற்கு நீதிபதி சம்மதித்தார்.
மேலும், தமிழக அரசு சார்பில் மற்றொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணை அதிகாரிகள் கொடநாடு கொலை, கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சிபிசிஐடி போலீஸ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் கொண்ட குழு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி அளித்தனர்.
தடயங்களை அழிக்கக் கூடாது, மாற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் சோதனை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு பங்களாவில் நடத்தப்படும் சோதனையை முழுமையாக வீடியோ எடுத்து சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications