மிரட்டுறாங்க சார்.. திடீரென வந்த மர்ம கால்..போலீசிடம் புட்டுபுட்டு வைத்த சயான் - ஸ்பெஷல் பாதுகாப்பு
நீலகிரி: கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் சயானுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. ஊட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதோடு இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
இந்த நிலையில்தான் கோடநாடு வழக்கில் தனக்கு எதிராக மிரட்டல்கள் வைக்கப்பட்டு வருகிறது என்று சயான் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஊட்டி எஸ்பியிடம் புகார் அளித்த சயான் தனது புகாரில், எனக்கு கடந்த சில நாட்களாக மிரட்டல் போன் கால்கள் வருகின்றன. தெரியாத எண்களில் இருந்து போன் செய்து மிரட்டுகிறார்கள்.

மூன்றாம் நபர்
மர்ம நபர்களிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. இந்த வழக்கில் வாக்குமூலம் கொடுப்பதற்காக நான் போலீஸ் நிலையம் மற்றும் கோர்ட்டுக்கு செல்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் எனக்கு வரும் மிரட்டல்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னுடைய உயிருக்கும், பாதுகாப்பிற்கும் பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது என்று சயான் புகார் அளித்துள்ளார்.

பாதுகாப்பு
அதோடு தனக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்த முழு விபரங்கள், இந்த போன் எண்கள் குறித்த விவரங்களையும் அவர் போலீசாரிடம் புட்டு புட்டு வைத்து இருக்கிறார். இதன் காரணமாக இத்தனை நாட்கள் போலீஸ் பாதுகாப்பு இன்றி இருந்த சயானுக்கு தற்போது இரண்டு போலீசார் காவலாக நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை முடியும் வரை இவர்கள் சயானுக்கு காவலாக இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சயான்
2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல்கள் வந்த நிலையில்தான் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications