"ஜித்தன் வேலை".. கோடநாடு குற்றவாளிகளை கூடலூர் வழியாக தப்பிக்கவிட்ட அந்த 3 பேர்?..வழக்கில் திருப்பம்
ஊட்டி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு 8 குற்றவாளிகள் கூடலூர் வழியாக கேரளாவிற்கு தப்பி சென்றது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணை வேகமாக நடந்து வருகிறது. 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் மூலம்.. 7 மில்லியன் டாலர் திரட்டி.. ஆப்கான் மக்களுக்கு உதவி புரிந்த மீம்ஸ் கிரியேட்டர்
சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் வழக்கை ஒவ்வொரு தனிப்படையும் தனி தனி கோணங்களில் விசாரித்து வருகிறது

கொலை
இந்த நிலையில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்த அதே நாள், அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு கொள்ளை கும்பலில் பாதி பேர் கேரளாவிற்கு தப்பி ஓட முயன்று உள்ளனர். படங்களில் காட்டுவது போல வாகனங்கள் மாறி, காட்டு பாதை வழியாக போலீசுக்கு தெரியாமல் தப்பி ஓட முயன்று உள்ளனர். ஜித்தன் ஜாய் என்ற நபரின் தலைமையில் கொள்ளை மற்றும் கொலையில் ஈடுப்பட்ட 8 பேர் இப்படி தப்பி ஓட முயன்று உள்ளனர். ஜித்தன்தான் இவர்களை மொத்தமாக அழைத்துக்கொண்டு தப்பி ஓட முயன்று உள்ளார்.

கூடலூர்
இவர்கள் கூடலூர் பாதையை தேர்வு செய்து அதன் வழியாக தப்பித்து செல்ல முயன்று இருக்கிறார்கள். அப்போது கூடலூர் அருகே போலீசார் இவர்களை பிடித்தனர். இவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள். இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள். கூட்டமாக எங்கிருந்து வருகிறீர்கள் என்று போலீசார் விசாரித்து உள்ளனர். அதோடு இவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் கேள்விகளை எழுப்பி உள்ளனர். இந்த நிலையில்தான் இவர்களை சுனில், ஷாஜி, அனிஷ் ஆகிய மூன்று பேர் காவல் நிலையித்திற்கு வந்து விடுவித்து அழைத்து சென்றுள்ளனர்.

அதிமுக வர்த்தக அணி
இதில் அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவனின் சகோதரர்தான் சுனில் என்று கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் வந்து போலீசிடம் பேசி அந்த 8 பேரை விடுவிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கோடநாடு வழக்கில் 36வது அரசுத் தரப்பு சாட்சியாக ஷாஜி மற்றும் அனிஷ் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். ஊட்டியில் இவர்களிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.

குற்றவாளிகள்
குற்றவாளிகளை தப்பிக்கவிட்டது ஏன்? யாருடைய உத்தரவின் பெயரில் குற்றவாளிகளை தப்பிக்கவிட்டீர்கள் என்று போலீசார் இவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் அந்த இரண்டு பேரும் முக்கியமான வாக்குமூலங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. கொலை மற்றும் கொள்ளை நடந்த அன்று என்ன நடந்தது? 8 பேரும் கூடலூர் வழியாக கேரளா சென்றது எப்படி என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

வர்த்தகர் அணி
இன்னொரு பக்கம் அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவனின் சகோதரர் சுனிலை போலீசார் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுனில், ஷாஜி மற்றும் அனிஷ் ஆகிய மூன்று பேர்தான் குற்றவாளிகளை தப்பிக்கவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்த நிலையில் இப்போது விசாரணைகள் நடக்கிறது. விசாரணையின் முடிவிலேயே உண்மையில் என்ன நடந்தது என்று தெரிய வரும்.

தனிப்படை
இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டதில் இருந்தே அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக கேரளாவில் இருக்கும் 8 குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து உள்ளனர். இந்த வழக்கில் கூடுதலாக புதிய சாட்சியங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த வழக்கில் முக்கியமான குற்றவாளி யார்? என்ன நடந்தது? என்பது குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications

































