கோடநாடு கொலை.. குஜராத் குழுவினர் மீண்டும் ஆய்வு.. ஊட்டி கோர்ட்டில் புதிய மனு.. விலகுமா மர்மம்?
நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக குஜராத் தடயவியல் குழுவினர் மீண்டும் ஆய்வு நடத்த உள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் சம்பவ இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு எஸ்டேட் கொலை: நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் இங்குதான் ஓய்வெடுக்க வருவார். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

10 பேர் கைது: இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை போனது என்ன? எதற்காக கொள்ளை நடந்தது அதற்கான சூத்திரதாரி யார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன. இப்போது கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று பல ஆண்டுகாலமாகவே குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன.
மர்ம மரணங்கள்: கோடாநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியாதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சிபிசிஐடி: இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேக வளையத்தில் இருப்பபர்களின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
குஜராத் தடயவியல் குழுவினர்: இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தகவல்களைச் சேகரிப்பதற்காக குஜராத்தில் இருந்து தேசிய தடவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் கடந்த வாரம் திருச்சி வந்தனர். செல்போன், தொலைபேசி டவரிலிருந்து தகவலை சேகரிக்க தடவியல் நிபுணர்கள் திருச்சி வந்துள்ளனர். திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தடவியல் நிபுணர்கள் சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து தகவலை சேகரித்தனர்.
செல்போன் பேச்சுக்கள்: கோடநாடு சம்பவம் நடந்த நாளில் பதிவாகியிருந்த செல்போன், தொலைபேசி டவரில் தகவலை தடயவியல் குழுவினர் சேகரிக்கின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளது.
ஊட்டி கோர்ட்: இதனிடையே இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகி இருந்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றவாளிகளின் செல்போன் உரையாடல் தொடர்பான தொலை தொடர்புத்துறை விசாரணை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்று தெரிவித்தனர்.
புதிய மனு: எதிர்தரப்பு வக்கீல் விஜயன், கோடநாடு பகுதியில் கொலை நடந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, கோடநாடு கொலை வழக்கில் சம்பவ இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.
மர்மங்களும் திகில் திருப்பங்களும் நிறைந்த வழக்காக உள்ளது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு. இந்த கொலை குறித்த மர்மங்கள் எப்போது விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications