இவங்களுக்கு பால், பஸ், தண்ணியை கட்பண்ணணும்.. டிக்டாக் சூர்யா பேச்சு.. கொதித்து போன மசினக்குடி மக்கள்
ஊட்டி: காட்டு யானைக்கு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் மசினகுடி மக்களை பற்றி கொச்சையாக பேசி வீடியோ வெளியிட்ட டிக் டாக் சூர்யா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில், மசினகுடி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் டயரில் தீவைத்து காட்டு யானையின் மீது வீசப்பட்டதில், அதன் காதில்தீ பிடித்து படுகாயம் அடைந்து உயிரிழந்தது. யானைக்கு தீ வைக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானையை கொடூரமாக கொன்ற அந்த கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய அளவில் பெரும் விவாதம் எழுந்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஒருவர் தலைமறைவு
சமூக வலைதளங்களில் பலரும் யானையை தீ வைத்து காயப்படுத்தியவர்களுக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரசாத்(36) மற்றும் ரேமண்ட் டீன் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காட்டு யானையை விரட்ட தீவைத்து துணியை அதன் மீது வீசியதை விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை வனத்துறை தேடி வருகின்றனர்.

விதி மீறி நடத்தல்
இந்நிலையில் கைதான ரேமண்ட் டீன் மற்றும் அவரது அண்ணன் ரிக்கி ரேயான் ஆகியோர் விதி மீறிய கட்டிடத்தில் நடத்தி வந்த 3 விடுதி அறைகளுக்கு கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன் மற்றும் மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.

அவதூறு பேச்சு
தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் திருப்பூரை சேர்ந்த டிக்-டாக் சூர்யா, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில், மசினகுடி பகுதி மக்களை கொச்சையாக பேசியதுடன். த ஊருக்கு போக்குவரத்து, பால், குடிநீர் உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என பேசி இருந்தார். மத ரீதியாக மோதல்களை உருவாக்கும் விதத்திலும் அவருடைய பேச்சு அமைந்திருந்தாக புகார் எழுந்தது,

சூர்யா மீது புகார்
இந்த வீடியோவை பார்த்த மசினகுடி பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாவனல்ல பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் செய்த செயலுக்கு ஒட்டு மொத்தமாக மசினகுடி பகுதி மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய சூர்யாவிற்கு கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே மசினகுடி ஊர் மக்கள் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications