‘வந்துட்டேனு சொல்லு’.. 23 நாட்களுக்கு பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை
நீலகிரி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - நீலகிரி மாவட்டம் உதகை இடையே மலை ரயில் சேவை உள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த மலை ரயில் சேவை, கடந்த 23 நாட்களாக இயங்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் 23 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் என்றாலே அதன் குளுகுளு காலநிலையும், எழில் கொஞ்சும் இயற்கையும்தான் அனைவருக்கும் நியாபகம் வரும். சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு, தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் கூட சுற்றுலாவுக்காக வந்து செல்கின்றனர்.

முக்கியமாக ஏப்ரல், மே உள்ளிட்ட சீசன் காலகட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காகவும், கோடை விடுமுறையை ஜாலியாக கழிப்பதற்காகவும் ஏராளமான மக்கள் உதகை வருகின்றனர். கோடை சீசன் என்று மட்டுமல்லாமல் வீக் எண்ட், தொடர் விடுமுறை, பண்டிகை காலங்கள் என அனைத்து நாள்களிலுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை அங்கு குறையாமல் இருக்கும்.
நீலகிரி மாவட்டத்தின் மற்றொரு சிறப்பு மலை ரயில் சேவை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாகவும் இது அறிவிக்கப்பட்டது. அதன்படி மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசல் மூலமாகவும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் அலாதியான அனுபம் கிடைக்கும். இதன் காரணமாக உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் இடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகை வரை நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.30 மணிக்கு உதகையைச் சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக நீலகிரி சுற்றுவட்டாரம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை ரயில் வழித்தடத்தில், மண் சரிவு ஏற்பட்டது. மண்ணும், பாறைகளும், மரங்களும் பாதையில் விழுந்ததால் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல ரயில் பராமரிப்புப் பணியும் நடந்து வந்தது. ரயில்வே தொழிலாளர்கள், பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல், 31ம் தேதி (நேற்று) வரை, தொடர்ந்து 23 நாள்களுக்கு மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும், மலை ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற அறிப்புக்காக காத்திருந்தவர்களுக்கு, சேவை ரத்து என்ற தகவலே வந்து கொண்டிருந்தது. இந்த அறிவிப்பு மலை ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு, அந்தத் தொகை முழுவதும் திருப்பித் தரவும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 23 நாள்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மலை ரயில் சேவை தொடங்கியிருப்பதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications