குளிரில் நடுங்கும் நீலகிரி.. கனமழையால் சரியும் மரங்கள்.. கேரளா செல்ல இரவு நேர போக்குவரத்துக்கு தடை!
நீலகிரி: தமிழகத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இரவு நேர போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்களிலும் மேற்கும் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெரும்பாலான நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதேபோல் மேட்டூர் அணை நிரம்பியதால் அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி ஆகியவை அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீலகிரி மாவட்ட பள்ளி மற்று கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலத்த காற்று வீசுவதால், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு சாலைகளிலும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. மழை காரணமாக தமிழகத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகமாக அவலாஞ்சியில் 200 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications