செம நியூஸ்..! மீண்டும் தொடங்கிய நீலகிரி மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்
நீலகிரி: மலை ரயில் பாதையில் விழுந்து கிடந்த பாறைகள் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முழுவதுமாக முடிந்த நிலையில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கோவை, நீலகிரி போன்ற மேற்குத் தொடர்ச்சி மழையை ஓட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது.

மண் சரிவு
அப்படிக் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டன. இதனால் ரயில் பாதையில் பல பெரிய கற்கள் உருண்டு விழுந்தன. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதை முற்றிலுமாக மூடப்பட்டது.

ரயில் சேவை ரத்து
மேலும் சில இடங்களில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு அப்படியே சாய்ந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் ஊட்டி மலை ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் ஊட்டி சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சீரமைப்பு பணிகள்
அதேநேரம் ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகளிலும் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். ரயில் பாதை நெடுக விழுந்து கிடந்த பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும் பணிகளில் கடந்த 2 நாட்களாக ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், ரயில் பாதையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களும் இயந்திரங்களின் உதவியுடன் வெட்டி அகற்றப்பட்டன. கடந்த 2 நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்த இந்த சீரமைக்கும் பணி நேற்று முடிவடைந்தது.

மீண்டும் தொடக்கம்
இதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதில் பயணிக்க இன்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் ரயில் நிலையத்தில் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications