தாமரைக்கு பதில் உதயசூரியன்.. மூதாட்டி விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
நீலகிரி: நீலகிரியில் பாஜகவுக்கு ஓட்டளிக்க விரும்பிய மூதாட்டியின் விரலை பிடித்து திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கான பட்டனில் அழுத்தியதாக கூறி தேர்தல் அதிகாரியுடன் நீலகிரி பாஜக வேட்பாளர் எல் முருகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். நீலகிரி லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் சிட்டிங் எம்பியாக திமுகவின் ஆ ராசா போட்டியிட்டுள்ளார்.

அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ் செல்வன் களமிறங்கி உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ஆவார். அதேபோல் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் களத்தில் உள்ளார்.
இந்நிலையில் தான் நீலகிரி தொகுதியில் காலை முதல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்டம் அன்னூர் ஓட்டுச்சாவடியில் பணியில் உள்ள தேர்தல் அதிகாரியுடன், எல் முருகன் திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது மூதாட்டி ஒருவர் தனது பேரனுடன் ஓட்டுப்போட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றுள்ளார். அவர் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரி அந்த மூதாட்டியை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மூதாட்டியின் பேரன் பாஜகவினரிடம் கூறிய நிலையில் அவர்கள் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எல் முருகன் அங்கு சென்று தேர்தல் அதிகாரியிடம் கேட்டார். அப்போது அந்த அதிகாரி, ‛‛நான் எதுவும் செய்யவில்லை. அந்த அம்மா தான் ஓட்டுப்போட்டார். இந்த விஷயத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார். ஆனால் எல் முருகன் விடவில்லை. அவருடன் நின்ற மூதாட்டியின் பேரனை சாட்சியாக வைத்து தேர்தல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு எல் முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛நீலகிரி தொகுதியில் காலையில் இருந்தே மக்கள் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த பூத்தில் மட்டும் வயதான அம்மா ஒருவர் தனது பேரனை ஓட்டுப்போட அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த அம்மா 3ம் நம்பர் பட்டனை (பாஜகவின் தாமரை சின்னம்) அழுத்த கூறியுள்ளார். ஆனால் இங்கிருக்கும் அதிகாரி ஒன்றாம் நம்பர் பட்டனை (திமுகவின் உதயசூரியன் சின்னம்) அழுத்தியதாக கூறியுள்ளனர். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்கள், ‛‛அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறீர்களா?'' என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு எல் முருகன், ‛‛இப்போது இல்லை. ஆரம்ப நாளில் இருந்தே நீலகிரியில் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு தான் சாதகமாக செயல்படுகின்றனர். அதற்கான உதாரணம் தான் இன்றும் நடந்துள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications