Exclusive: மோசமான வார்த்தை சொன்ன ஆ.ராசா மீது மக்கள் கடும் கோபத்துல இருக்காங்க.. எல்.முருகன் பேட்டி!
நீலகிரி: ஆ.ராசா மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள், வெற்றி பெறப்போவது பாஜக தான் என நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திமுக - அதிமுக - பாஜக நேரடியாக மோதும் தொகுதியான நீலகிரியில் ஆ.ராசா, எல்.முருகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் இருக்கின்றனர். இந்த தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல். முருகன்.

கேள்வி: நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இருக்கிறார். இந்த மும்முனை போட்டி டஃப்ஃபாக இருக்கும் என நினைக்கிறீர்களா?
எல்.முருகன்: என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆ.ராசா மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்து தாய்மார்களை இழிவான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசா மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இது தேசியமும் தெய்வீகமும் நிறைந்த பகுதி. பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை. தெய்வீகத்தை இழிவுபடுத்துபவர்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எம்.பியாக இருந்தும் மக்களை சென்று சந்திக்காத ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
அதிமுக முன்னாள் சபாநாயகரும் மக்களை சந்தித்தது இல்லை. மக்கள் மத்தியில் அவர் மீதும் கோபம் இருக்கிறது. அந்தக் கோபம் அவரது மகன் மீது திரும்புகிறது. எனவே பாஜக வெற்றியானது இலகுவானதாக உள்ளது. மக்களின் பேராதரவோடு நீலகிரியில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்று பிரதமருக்கு சமர்ப்பிப்போம்.
கேள்வி: அதிமுக உடன் கூட்டணியில் இல்லாமல் இருப்பது உங்களுக்குப் பின்னடைவா?
எல்.முருகன்: கூட்டணியை பொறுத்தவரை எல்லா முடிவையும் எடுப்பது எங்கள் தேசிய தலைமை தான். அதை நாங்கள் பின்பற்றுவோம். கூட்டணிக்கு ஒரு கட்சி வருகிறது, வரவில்லை என்பதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக எங்களை விட்டு போனார்கள் என்றால் அதற்கு வருத்தப்பட வேண்டியது அவர்கள்தான்.
கேள்வி: விஜயதாரணி உள்ளிட்டோரை பாஜகவில் இணைத்ததில் உங்கள் பங்கு அதிகம். தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்துவதில் பிரதமர் மோடியின் ஐடியா என்ன? ஏன் இத்தனை முறை இங்கு வருகிறார்?
எல்.முருகன்: தமிழ்நாடு ஒரு முற்போக்கு மாநிலம். ஆனால், இன்னும் மொழியால், இனத்தால், மதத்தால் பிரிவினை பேசி வருவதை திமுக செய்து வருகிறது. நம் எல்லோரையும் விட பிரதமர் மோடி தமிழ் மொழி மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் தமிழ் பண்பாட்டையும், தமிழ் கலாச்சாரத்தையும் போற்றி வருகிறார்.
தமிழ் கலாச்சாரத்தின் காவலனாக விளங்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ் மக்கள் மீது அலாதி அன்பு வைத்துள்ளார். அந்த பாசத்தின் வெளிப்பாடாக தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்.
நாங்கள் எப்போதும் ஒரு தேர்தலுக்காக வேலை செய்பவர்கள் அல்ல. தேசத்தின் வளர்ச்சியையும், நாட்டின் மேம்பாட்டையும் கருத்தில் கொள்பவர்கள். இந்த நாடு 2047ல் உலக வல்லரசாக இருக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தித்தான் இந்த தேர்தல் களத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
கேள்வி: தென் தமிழ்நாட்டில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் போன்ற வலுவான கூட்டணி தலைவர்கள் உள்ளனர். மேற்கு மண்டலத்தில் அப்படியான வலுவான கூட்டணி ஆதரவு அமையவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்.முருகன்: டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக ஆகிய கட்சிகள் மேற்கு மண்டலத்திலும் வலுவாக இயங்கி வருகின்றன. எல்லாவற்றையும் விட மேற்கு மண்டலம் பாஜகவுக்கு ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளது. கோவை, நீலகிரியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர். பாஜகவுக்கு இப்பகுதியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.












Click it and Unblock the Notifications