குன்னூரை மூழ்கடித்த கனமழை! அடேங்கப்பா ஒரே நாளில் இவ்வளவா? இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று இரவு மட்டும் சுமார் 30 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மாண்டஸ் புயல் காரணமாக வட மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று புயல் கரையை கடந்தது.
கரையை கடந்தாலும் தொடர்ந்து மேற்கு நோக்கி அரபிக் கடலுக்கு வலுவிழந்து வெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பயணித்தது மாண்டஸ்.

வெள்ளம்
இந்த பயணத்தின்போது போகும் வழியெங்கும் மழையை ஏற்படுத்திவிட்டு சென்றது. ஏற்கெனவே குன்னூரில் லேசான மழை பெய்து வந்த நிலையில் இந்த புயல் மேகங்கள் மிதமான மழையை பொழிந்தன. இதனால் குன்னூரில் ஏறத்தாழ 4 நாட்களுக்கும் மேலாக மழை நீடித்துக்கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த இந்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. மட்டுமல்லாது சாலைகளிலும் வெள்ளம் காட்டாறு போல ஓட தொடங்கியது.

மண் சரிவு
இதன் காரமாக மலைகளில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் உருண்டு விழத்தொடங்கின. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மழையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மரங்களும் ஆங்காங்கே வேருடன் சரிந்திருக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நேற்று பெய்த மழையின் அளவை பொருத்த அளவில் குன்னூரில்தான் அதிகபட்சமாக மழை பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குன்னூரில் ஆரோக்கியபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சாலையை மண் மூடியுள்ளது.

மலை ரயில்
vஆரோக்கியபுரம் மட்டுமல்லாது டிடிகே சாலை, அம்பிகாபுரம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதில் உழவர் சந்தை அருகே அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் கிருஷ்ணாபுரம், குன்னூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை பொறுத்த அளவில் நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் மலை ரயில் தண்டவாளத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு
நேற்றிரவு மழை நின்றவுடன் நகராட்சி அதிகாரிகள் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மரங்களை உடனடியாக அகற்ற தொடங்கினர். தற்போது வரை 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உருண்டு விழுந்துள்ள பாறைகள் மற்றும் மண்ணை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி வருகின்றனர். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சாலை, வண்டிச்சோலை என மொத்தம் 21 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் மின் கம்பங்களும் விழுந்துள்ளன. 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மீட்பு
மற்றொருபுறம் விளைநிலங்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறை அதிகாரிகளும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளதாக குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் கூறியுள்ளார். ஆனால் நீலகிரி பகுதியில் மழை மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக சுமார் 43 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications