இன்று நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. என்னென்ன நிகழ்ச்சிகள் தெரியுமா? முழுவிபரம்
நீலகிரி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இரவில் அவர் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்ற நிலையில் இன்று 2வது நாளாக தமிழகம் வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் விசிட் செய்யும் பிரதமர் மோடியின் முழு நிகழ்ச்சி பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தார். சென்னையில் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

மெரினா அருகே விவேகானந்தர் இல்லத்தில் நடந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் 125ஆவது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பிறகு சென்னை பல்லாவரம் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரயில் திட்டம், சாலை திட்டம், கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை திறந்து வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
அதன்பிறகு அங்கு பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து சென்னையில் இருந்து இரவில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்றடைந்தார். மைசூரில் ஓய்வெடுத்த பிரதமர் மோடி இன்று காலை காலை 7 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார். அங்கு அவர் வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்கிறார்.
இதையடுத்து அவர் ராணுவ ஹெலிகாப்டரில் தமிழ்நாடு வருகிறார். காலை 9.35 மணிக்கு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை அவர் சந்திக்கிறார். அவர்களின் பேசும் பிரதமர் மோடி இருவரையும் கவுரப்படுத்த உள்ளார்.
அதன்பிறகு தேசிய புலிகள் காப்பகத்தில் சிறப்பாக பணியாற்றிய கள இயக்குனர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். இதுதவிர முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மூத்த மூன்று யானை பாகன்களை சந்திப்பதோடு யானைகளுக்கு உணவளிக்க உள்ளார். மேலும் புலியை பிடிப்பதில் திறமையாக செயல்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் மோடி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து மசனகுடிக்கு சாலை மார்க்கமாக காரில் செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் வருகைையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
******












Click it and Unblock the Notifications