ஊட்டியில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்எல்ஏவை தடுத்து நிறுத்திய போலீஸ்.. என்னாச்சு?
ஊட்டி: ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று வந்தடைந்தார். அங்கு அவருக்கு அரசு அதிகாரிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊட்டி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காண காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், அவரது ஆதரவாளர்களுடன் வந்துள்ளார். ஆனால் அவரை உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கோடநாடு, கூடலூர், தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. அங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ரசிக்கவும், சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கோடைக்காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை சார்பில், ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடைபெற்றது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற 127-வது மலர் கண்காட்சி ஊட்டியில் 15-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். அவர் நேற்று காலை 11.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டார். நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்பி நிஷா ஆகியோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து புத்தகங்கள், சால்வை, பூங்கொத்து கொடுத்து பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் ஊட்டியில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிடுகிறார். நாளை மறுநாள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பட்டா வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16-ந் தேதி சுற்றுப்பயணம் முடிந்து கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வரின் வருகையையொட்டி ஊட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு வந்த முதலல்வரை வரவேற்க கூட்டணிக் கட்சியினர் காத்திருந்தனர். அந்த வகையில், உதகை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷும் வரவேற்பு அளிக்க விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்தார். ஆனால், மாளிகையின் நுழைவாயிலிலேயே எம்எல்ஏ கணேசன் வந்த காரை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ கணேஷ், எதற்காக காரை தடுத்து நிறுத்துகிறீர்கள்? எனக் கேட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் உங்களுக்கு மட்டுமே விருந்தினர் மாளிகைக்கு உள்ளே செல்ல அனுமதி எனவும், உங்களுடன் வந்துள்ள காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு அனுமதி இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்ததால் எம்எல்ஏவும் காரிலேயே அமர்ந்து கொண்டார்.
முதல்வரை காண செல்வதென்றால் எம்எல்ஏ மட்டும் உள்ளே போகலாம் என போலீசார் கூறியும், கிட்டத்தட்ட அரைமணி நேரமாக எம்எல்ஏ கணேஷின் கார் விருந்தினர் மாளிகை நுழைவாயில் பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. ஆனால், கட்சித் தொண்டர்களுடன் அவரை போலீசார் உள்ளே விடவே இல்லை. இறுதியாக எம்எல்ஏ கணேஷ் மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காண விருந்தினர் மாளிகைக்குள் சென்றார்.












Click it and Unblock the Notifications