நீலகிரியில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுக்காவுக்குள்பட்ட தமிழகத்தின் எல்லையான தாளூரில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிறங்குகிறார்.

இந்த நிலையில் நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்த ராகுலின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சோதனை நடந்து முடிந்தவுடன் ராகுல் காந்தி அந்த பகுதியில் இருந்து தேவாலயத்திற்கு சென்றார். இதைத் தொடர்ந்து அவர் நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளை சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் வயநாடு புறப்படுகிறார். அது போல் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் காரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
இதனால் யாரும் எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தேர்தல் நடத்தையில் ஒன்றாகும். இது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த விதியாகும்.
ரூ 50 ஆயிரத்திற்குள் பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு போய் ஆவணங்கள் இல்லாவிட்டால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். ஒரு வேளை ரூ 10 லட்சத்திற்கு மேல் யாராவது பணம் கொண்டு சென்றால் அந்த வழக்கை வருமான வரித் துறை விசாரிக்கும்.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் சரியாக 6 நாட்கள்தான் இருப்பதால் எப்படியும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கக் கூடும் என்பதால் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் வாகனங்களை சோதனையிட்டு வருகிறார்கள் பறக்கும் படையினர்.
இதற்காக தமிழகத்தில் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பணியே ஆவணங்களின்றி அதிக அளவு பணம், பரிசுபொருள்கள் உள்ளிட்டவை கொண்டு சென்றால் பறிமுதல் செய்வதுதான். அந்த வகையில் இதுவரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்பி கனிமொழி, முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் உள்ளிட்டோரின் கார்களை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அது போல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடச் சென்ற அண்ணாமலையின் ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications