கோடநாடு அருகே சசிகலாவின் எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைப்பு.. சிசிடிவி காட்சிகளை பார்த்து திகைப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு செல்லும் வழியில் எஸ்.கைகாட்டி அருகில் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கண்ணாடிகளை உடைத்தது யார் என்பதை அறிந்த பின்னர் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமானது ஆகும்.இங்கு சில வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை, கொள்ளை விவகாரம் இன்று தமிழக அரசியலையே அதிர வைத்துள்ளது. இன்றுவரை இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

கோநாட்டில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, பணம் கொள்ளையடிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. இந்த வழக்கு நீலகிரி மாவட்டத்தில் உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சூழலில் கோடநாடு எஸ்டேட் போல், கோடநாடு செல்லும் வழியில் எஸ்.கைகாட்டி அருகில் சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்(கிரீன் டீ எஸ்டேட்) இருக்கிறது.
இங்கு கடந்த திங்கள்கிழமை அன்று நள்ளிரவில் கர்சன் எஸ்டேட் வளாகத்தில் உள்ள அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போய் அங்கு என்ன நடந்தது என்று அலுவலர்கள் பார்த்தார்கள். இது திருட்டு முயற்சியாக இருக்குமோ என அலுவலர்கள் பயந்துபோனார்கள்.

இதுகுறித்து சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் எஸ்டேட் அலுவலர்கள் அன்றே புகார் அளித்தனர். இதையடுத்து கர்சன் எஸ்டேட் வளாகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு நடுவில், அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து பார்த்தனர்.
அந்த சிசிடிவி வீடியோக்களை பார்த்த போது, நள்ளிரவில் காட்டு யானை வந்து கண்ணாடிகளை உடைத்து, அங்கு உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சற்று நேரம் தேடி பார்த்து விட்டு திரும்பி சென்றுள்ளது தெரியவந்தது. இந்த காட்சிகளை பார்த்த பின்னர் தான், கண்ணாடிகள் உடைக்கப்பட்டது திருட்டு முயற்சிக்காக இல்லை என்பதும், காட்டு யானை தான் கண்ணாடிகளை உடைத்தது என்பதும் உறுதியானது. இதனால் எஸ்டேட் அலுவலர்கள் மற்றும் போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.












Click it and Unblock the Notifications