காவு வாங்கும் கல்லட்டி மலை பாதை.. ஊட்டியில் ஒரு "திகில்" கலந்த சாலை.. என்ன காரணம்?
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மசினக்குடிக்கு செல்லும் கல்லட்டி சாலை அதிக விபத்துகளை ஏற்படுத்தும் சாலையாக அறியப்படுகிறது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அது போல் அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வருகை தருகிறார்கள்.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க விரும்பு பலர், அதை சுற்றியுள்ள முதுமலை மற்றும் மசினக்குடி செல்வதற்கு தவறுவதில்லை. மசினக்குடியில் நிறைய கும்கி யானைகள் உள்ளன.

நிறைய ரிசார்டுகள்
இவற்றை பார்ப்பதற்காகவும் இங்கு நிறைய ரிசார்டுளும் உள்ளன. இங்கு தங்கியிருந்து முதுமலைக்கு சென்று புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார்கள். மசினக்குடிக்கு செல்ல ஊட்டியிலிருந்து கூடலூருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து மசினக்குடிக்கு செல்லலாம். இந்த நேர் வழிபாதையை யாரும் விரும்புவதில்லை.

கல்லட்டி மலை சாலை
இதன் தூரமும் அதிகம் என்பதால் பெரும்பாலானோர் விரும்புவது ஊட்டி டூ மசினக்குடி செல்ல கல்லட்டி மலை பாதையை தேர்வு செய்கிறார்கள். இங்குதான் அவர்கள் தவறு செய்கிறார்கள். உயிருக்கு உத்தரவாதம் தரும் நேர் வழி சாலையைவிட்டு விட்டு நேரமிச்சிற்காகவும் டீசலை மிச்சப்படுத்தவும் இந்த கல்லட்டி சாலையை தேர்வு செய்து சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

உயிரிழப்புகள்
இதனால் உயிரிழப்புகள் பல நடந்துள்ளன. பல வாகனங்கள் எரியும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. 25 கி.மீ தூரத்தை மிச்சப்படுத்த தங்கள் உயிரையே இழக்கும் நிலைக்கு மக்கள் செல்கிறார்கள். இந்த ஊட்டி டு கல்லட்டி சாலை என்பது 35 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.

கொண்டை ஊசி
இந்த கொண்டை ஊசி வளைவுகளில் எந்த வளைவுகளுக்கு எந்த கியரை இயக்க வேண்டும் என அறிவிப்பு பலகைகளை வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப பெரும்பாலான வாகன ஓட்டிகள் நடந்து கொள்ளாததும் ஒரு காரணம் என்கிறார்கள் அந்த பகுதிகளில் நீண்ட காலமாக வாகனங்களை இயக்குவோர்.

ஒரே கியர்
குறுகலான இந்த பாதையில் கீழிருந்து மேலேயும் மேலே இருந்து கீழேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இரு வழிகளை பயன்படுத்தும் வாகனங்களும் அறிவிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் கியர்களில் சென்று வர வேண்டும். ஆனால் சுற்றுலா பயணிகள் நேரமின்மை காரணமாக மற்ற சாலைகளில் இயக்குவது போன்றே இந்த சாலையில் வாகனங்களை இயக்குகிறார்கள்.

டிரைவர்கள்
மேலும் இந்த சாலையில் இயக்கத் தெரிந்த டிரைவர்களை அமர்த்தாமல் இவர்களே வாகனங்களை இயக்கிக் கொண்டு செல்வதும் இது போன்ற விபத்துகளும் வித்திடுகிறது. மலையில் ஏற ஏற காற்றின் வேகம் காரணமாகவும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இவ்வாறு சிக்கும் வாகனங்களில் பெரும்பாலானோர் உயிரிழந்ததாகவே கூறுகிறார்கள்.

மசினக்குடி- கல்லட்டி மலை பாதை
கடந்த ஆண்டு சென்னையிலிருந்து ஊட்டியின் மசினக்குடிக்கு கல்லட்டி சாலை வழியாக சுற்றுலா வந்த 7 பேரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வழுக்கிக் கொண்டு 250 அடி ஆழ பள்ளத்தில் போய் விழுந்தது. இவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

முழுவதும் தடுக்கப்படுவது எப்போது
இது போல் பள்ளத்தில் விழும் வாகனங்களின் நிலையை அவ்வழியாக செல்லும் வாகனங்களோ அவர்களை குடும்பத்தார் தொடர்பு கொண்டு எந்த தகவலும் இல்லாத நிலையில் குடும்பத்தாரின் புகார்கள் மூலமாகவோதான் விபத்து நடந்ததையே கண்டுபிடிக்க முடிகிறது. இந்த சாலையில் பயணிக்க அனுமதி சீட்டு பெற வேண்டும். எப்படியாவது இந்த அனுமதி சீட்டை வாங்கி உள்ளே செல்கிறார்கள் அரைகுறையாக வாகனங்களை இயக்கத் தெரிந்த சிலர்! மனித உயிர்களை காவு வாங்கும் இந்த சாலையில் முழுவதுமாக வாகன இயக்கம் தடுக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications