கொளுத்தும் கோடை வெயில்.. குளுகுளு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி: தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுப்பதால், ஏராளமானோர் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கடுமையான அக்னி காற்றுடன் வெயில் வாட்டி வருகிறது.
காலை 7 மணிக்கே வெயில் தலைகாட்டி விடுவதால் மக்கள் அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மதிய நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

அச்சம்
குறிப்பாக வேலூர், திருச்சி, திருத்தணி, தஞ்சை, நெல்லை, மதுரை, சென்னை, சேலம், நாமக்கல், உள்ளிட்ட 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி அடிப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

வெயிலின் தாக்கம்
இதனிடையே ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கை வெளிவந்துள்ளதால், பயணிகளின் வருகையும் ஊட்டியில் கூடி வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில், சுற்றுலா தலங்களும் தயாராகி வருகின்றன.

பயணிகள் எண்ணிக்கை
கடந்த மாதம் 15 நாட்களில் மட்டும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து போயுள்ளனர். இதேபோல் ரோஜா பூங்காவிற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

அதிகரிக்கும்
சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், நகரில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்பட்டு வருகிறது. அதனை போலீசார் சீர் செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்கு சமவெளியில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications