தமிழ்நாடு அரசு எதிர்ப்பை மீறி ஊட்டியில் இன்று பல்கலை. துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை!
நீலகிரி: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி ஊட்டியில் இன்று பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் வேந்தர் ஆளுநர் என்பதால் தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ரவி என்பது அரசின் குற்றச்சாட்டு. பல்கலைக் கழக விவகாரங்களில் ஆளுநரின் இந்த போக்கை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ரவி, தொடர்ந்து பல்கலை கழக விவகாரங்களில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் ஊட்டியில் இன்று தமிழ்நாடு அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இத்தகைய ஆளுநரின் கூட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். மாநில அரசை ஆலோசிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். ஆளுநர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம் என தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு ஆளுநர் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications