அரசு பஸ்ஸில் சுகன்யா.. நீலகிரியின் முதல் பெண் கண்டக்டர்.. மலைத்து நிற்கும் கோத்தகிரி ரோடு: EXCLUSIVE
ஊட்டி: "பெண்களால் அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய பணி விளங்கி கொண்டிருக்கிறது.. பெண்களால் எத்தகையை சாதனையையும் நிகழ்த்த முடியும்.. என்னை போலவே பெண்கள் ஏராளமானோர் கண்டக்டர் பணியில் சேர முன்வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை" என்கிறார் நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் கண்டக்டர் சுகன்யா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா.. இவரது கணவர் பெயர கருப்பசாமி.. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. சுகன்யாவின் கணவர் கருப்பசாமி, கோத்தகிரி கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த ஊதியத்தின் மூலமே குடும்பத்தை பராமரித்தும் வந்திருக்கிறார்..

ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் கருப்பசாமி உயிரிழந்துவிடவும், அந்த குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. இதனால் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைமைக்கு ஆளானார் சுகன்யா.. 2 பெண் குழந்தைகளையும் எப்படியாவது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டிய பொறுப்பையும் ஏற்க முன்வந்தார்..
சுகன்யாவின் கணவர்
சோலூர் மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா, B. com பட்டதாரி. எனினும், சுற்றுலா மாவட்டமான நீலகிரியில், ஜீவனம் செய்வது சிரமம் என்பதால், தன்னுடைய கணவரின் அரசு பணியை தனக்கு வழங்கி உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதாவது டிரைவர் பணி தவிர்த்து வேறு எந்த பணி வழங்கினாலும் சிறப்பாக மேற்கொள்வதாக சுகன்யா குறிப்பிட்டிருந்தார்.
சுகன்யாவின் குடும்ப சூழலை பரிசீலனை செய்த போக்குவரத்து கழகம், நடத்துநராக பணியாற்ற அனைத்து தகுதியும் உரிமையும் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது..
சுகன்யாவிற்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்கப் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார்.. இறுதியில், முறையான பயிற்சிகளுடன், சுகன்யாவுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில் கோத்தகிரி கிளையில் நடத்துநராக சுகன்யா பணியமர்த்தப்பட்டார்
முதல் பெண் கண்டக்டர்
தற்போது கோத்தகிரி - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.. இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் கண்டக்டர் என்ற புதிய வரலாற்றை சுகன்யா படைத்திருக்கிறார்.
இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, நம்முடைய ஒன்இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார் சுகன்யா.. அதில், "நான் கோத்தகிரி அரசு பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறேன்.. கோத்தகிரியில் என்னுடைய கணவர் கருப்பசாமி பணிபுரிந்து வந்தார்.. ஆனால், 2023ம் வருடம் என்னுடைய கணவர் இறந்துவிட்டார்..
வாரிசு வேலை தந்த அரசு
எனவே, கருணை அடிப்படையில் வாரிசு வேலை வேண்டும் என்று கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்தேன். இதனை பரிசீலித்த அரசு, கடந்த ஜனவரி மாதம் எனக்கு அரசு வேலையை வழங்கியது.
தற்போது கோத்தகிரியில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறேன்.. இந்த வேலையில் சேரும்போது, ஒருவித தயக்கமும், பயமும், எனக்கு இருந்தது.. சங்கடமாகவும் இருந்தது.. ஆனால் என்னுடன் பணியாற்றுபவர்கள்தான் எனக்கு சப்போர்ட்டாக இருந்து, ஊக்கமும், உற்சாகமும் தந்தனர்..
என் கணவர் டிரைவராக பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு கண்டக்டர் பணி கிடைத்துள்ளது. பெண்களால் அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய பணி தொடர்ந்து இருக்கும். என்னை போலவே பெண் கண்டக்டர்கள் நீலகிரியில் அடுத்தடுத்து வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications