அச்சத்தில் உறைந்த உதகை.. ஆட்கொல்லி புலி தாக்கி மூதாட்டி பலி! சடலம் மீட்பு
நீலகிரி: உதகையில் சமீப நாட்களாக புலியின் அச்சுறுத்தல் இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில், தற்போது புலி தாக்கி மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். அவரது சடலத்தை வனத்துறையினர் மீட்டிருக்கின்றனர்.
ஆடு மேய்ப்பதற்காக சென்ற மூதாட்டி நாகி அம்மாள் புலி தாக்கி உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து புலியின் நடமாட்டம், இருப்பிடம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இன்று காலை வழக்கம் போல முதுமலை வனப்பகுதியில் நாகி அம்மாள் எனும் மூதாட்டி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரை காணவில்லை. எனவே உறவினர்கள் தேடுதலில் இறங்கினார். அப்போதுதான் நாகி அம்மாளை புலி தாக்கி இழுத்துச் சென்று இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் வனத்துறைனரும் இணைந்தனர்.
தீவிர தேடுதலில், புலி நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் ஒரு ஓடையில் இருந்து நாகி அம்மாளின் சடலம் வனத்துறையினரால் மீட்கப்பட்டிருக்கிறது. மீட்கப்பட்ட சடலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
கால்நடைகளை தாக்கி வந்த புலி, தற்போது மனிதர்களை தாக்கத் தொடங்கி இருப்பதால் இது ஆட்கொல்லி புலியாக இருக்கலாம் என்று பலரும் சந்தேகம் தெரிவித்து இருக்கின்றனர். எனவே உடனடியாக புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொதுவாக புலிகள் மனிதர்களை தாக்குவது கிடையாது. அவை மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட விலங்குகள். ஆனால் வயதான, பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாத அல்லது கடுமையான காயம் அடைந்த புலிகள் எளிதான இரையை தேடும். அப்போது மனிதர்கள் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கின்றனர். ஒருமுறை புலி மனிதர்களை வேட்டையாட தொடங்கி விட்டால், அதன் ருசி மீண்டும் மீண்டும் மனிதர்களை நோக்கி புலிகளை ஈர்க்கும். எனவே புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications