உதகை தேயிலைத் தோட்டத்தில்.. 3 நாட்கள் உணவு, தண்ணீரின்றி காயத்துடன் சுற்றித் திரிந்த புலி உயிரிழப்பு
உதகை: நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள போர்த்தியாடா பகுதியில் புலிகளுக்கிடையே நடைபெற்ற சண்டையில் பலத்த காயங்களுடன் நடக்க முடியாமல் கடந்த 3 நாட்களாக தவித்து வந்த 7 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த நிலையில் உணவு, தண்ணீரின்றி சுற்றித் திரிந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்த நிலையில், தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல் படி புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் காயம் அடைந்த புலிகளை பிடிக்கவும், மருத்துவ சிகிச்சையும் அளிக்க கூடாது என்பதால் வனத் துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி கண்காணிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக வனத் துறை அதிகாரி விளக்கமளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள போர்த்தியாடா கிராமத்தின் அருகே ஜனவரி 2 ஆம் தேதி தேயிலைத் தோட்டத்தில் புலி ஒன்று ஓய்வெடுத்து இருந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் புலியை வீடியோ பதிவு செய்த நிலையில், அதன் கால்கள் மற்றும் கண் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமல் மிகவும் சோர்வுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக உதகை தெற்கு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் புலியை கண்காணித்துள்ளனர். அப்போது, காலில் பலத்த காயத்துடன் புலி நடக்க முடியாமல் தேயிலைத் தோட்டத்தில் படுத்திருப்பதை உறுதி செய்தனர். அதன் பின்பு கடந்த 3 நாட்களாக இரவு பகல் என புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கடந்த 31 ஆம் தேதி இத்தலாறு அருகே உள்ள வனப் பகுதியில் இரண்டு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பலத்த காயமடைந்த அந்த புலி போர்த்தியாடா பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடக்க முடியாமல் தவித்து வந்த அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்காமல் வனத் துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அந்த புலி உயிரிழந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நீலகிரி மாவட்ட வன அலுவலர் மற்றும் முதுமலை வன கால்நடை மருத்துவர் உயிரிழந்த ஆண் புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் கௌதம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் புலிக்கு பலத்த காயங்கள் மற்றும் உள் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் புலி உயிரிழந்துள்ளது. அந்த ஆண் புலிக்கு சுமார் 7 முதல் எட்டு வயது இருக்கும். உடற்கூராய்வுக்குப் பின்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். ஆய்வின் அறிக்கை வந்த பிறகு முழு விபரம் தெரியவரும்.
புலிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல்படி புலிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு காயம் அடைந்த புலிகளை பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும், இதுபோன்று சண்டையிட்டு உயிரிழப்பது இயற்கையான ஒன்று என்பதனால் வனத் துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி கண்காணிப்பு பணிகள் மட்டுமே மேற்கொண்டதாக விளக்கமளித்தனர்.












Click it and Unblock the Notifications