ஊட்டி அருகே பொங்கல் பரிசு கேட்டு வந்த விஐபி விருந்தாளிகள்.. ரேஷன் கடையில் என்ன நடந்தது?
ஊட்டி: பொதுவாக யானைகளுக்கு கரும்பு, பலாப்பழம் மிகவும் பிடித்த உணவு ஆகும். மலையை ஒட்டி கரும்பு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தால் உடனே யானைகள் கண்டிப்பாக வரும். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டிருந்தது. இதை கண்ட யானைகள், பொங்கல் பரிசுத்தொகுப்பு எங்களுக்கு எங்கே என்று கேட்கும் விதமாக பெரிய சம்பவம் செய்திருக்கின்றன.
பொங்கல் பண்டிகை என்பது போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக அரசு ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்படடுள்ளது. பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் மாநகரங்களில் பேருந்துகளில் நாளை முதல் கூட்டம் அலைமோதும். மக்கள் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட உள்ளார்கள்.

பொதுவாகவே பொங்கல் பண்டிகையின் போது அரசு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம், அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து லாரிகளில் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்புகள் அனுப்பி இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பாண்டியாறு குடோன் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கட்டுகள் ரேஷன் கடைக்குள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த 8ம் தேதி நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பதிவேடுகள், விற்பனை முனைய எந்திரத்தை வெளியே தூக்கி வீசி உடைத்து காலி செய்தன.. அதோடு அங்கிருந்த அத்தியாவசிய பொருட்களை தின்றன.
இருப்பினும், பரிசுத்தொகுப்புக்கான பச்சரிசி, கரும்பு போன்றவை உள் அறைக்குள் பாதுகாப்பாக இருந்ததால், அதை வெளியே எடுக்க முடியாமல் காட்டு யானைகள் கடுமையாக போராடின. அந்த யானைகள் எவ்வளவோ போராடியும், கரும்பு கட்டுகளை எடுத்து சாப்பிட முடியவில்லை. இதனிடையே சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நாடுகாணி வனத்துறையினர் அங்கு வந்து காட்டு யானைகளை விரட்டினர். யானைகள் பொங்கல் பரிசை கடைசி வரை ருசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications