தகதக தங்கம்.. சுரங்கம் தோண்டி "தங்க துகள்" வெட்டி எடுக்கப்படுகிறதா?.. நீலகிரி "தேவாலா" ரகசியம்..!
சுரங்கங்கள் தோண்டி தங்கம் வெட்டியெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
ஊட்டி: சுரங்கங்கள் தோண்டி தங்கம் வெட்டியெடுக்க, தேவாலா மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தேவாலா என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது.. இங்கு முந்தைய காலங்களில் நிறைய தங்க சுரங்கங்கள் இருந்தன..
ஆங்கிலேயர் காலத்தில் இந்த சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் எடுக்கும் பணிகள் நடந்து வந்தன.. அதாவது, 1879ல் 'லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்' நிறுவனத்தினர், அந்த பகுதியில் சுரங்கம் தோண்டி தங்கம் எடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு, தங்க சுரங்கங்கள் அருகில் செல்ல, மத்திய அரசு தடைவிதித்தது.

தங்க துகள்
எனவே, உள்ளூரை சேர்ந்த சில நபர்கள், தங்க துகள் சேகரிக்கும் பணியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். சிறியளவிலான துகள் ஏதேனும் கிடைத்தால், அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிகிறது.. 10க்கும் மேற்பட்ட சுரங்கங்களில், உயிரையும் பணயம் வைத்து சிலர் தங்கத்தை தேடி இறங்கி வருகின்றனர்...கடந்த காலங்களில், சிலர் இந்த பகுதியில் பலியாகியும் உள்ளனர்.

குட்டியானை
உள்ளூரை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்க சுரங்கங்களை தோண்டி அதிலிருந்து தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்... மக்களுடைய வாழ்வாதாரம் கருதி அதிகாரிகளும் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த அக்டோபர் மாதம், இங்குள்ள ஒரு தங்க குழிக்குள் யானைக்குட்டி ஒன்று விழுந்துவிட்டது..

இன்னொரு குழி
இந்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து குட்டியை மீட்டு தாயுடன் சேர்த்து வைத்தனர்.. அப்போது, அங்கு ஏற்கனவே இன்னொரு குழி தோண்டப்பட்டிருப்பதையும், அந்த குழிக்குள் உயிருடன் ஒரு ஆண்யானை விழுந்து இறந்து, 6 மாதமாகி விட்டதையும் கண்டனர்.. அப்போதுதான் இந்த விவகாரம் வன ஆர்வலர்கள் காதுகளுக்கு எட்டியதும், கொந்தளித்து விட்டனர்.

கண்காணிப்பு
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மக்கள் எப்படி அத்துமீறி நுழைந்து தங்கம் எடுக்கலாம்?என்ற கேள்வியை முன்வைத்தனர்.. பின்னர், தங்கம் யாரும் எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு, ட்ரோன் கேமராக்கள் மூலமும் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.. ஆனாலும் ஒருசிலர் அத்துமீறி நுழைந்து தங்கம் வெட்டி எடுக்க முயன்றதாக தெரிகிறது.. இதனையடுத்து வனத்துறையினர் துப்பாக்கியுடன் தற்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications