ஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி!
வீட்டுப் பாடம் எழுதாத சிறுவனை அடித்துக் கொன்றதாக குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரீஸ்: பிரான்சில் வீட்டுப் பாடம் எழுதாத சிறுவனை அடித்துக் கொலை செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் வீட்டுப் பாடம் செய்ய அடம் பிடித்துள்ளான். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவனுடைய சித்தி, அவனை வீடு கூட்டும் துடைப்பத்தின் பின்புறக் கட்டையால் அடித்துள்ளார். இதில் கடுமையாக காயமடைந்த அச்சிறுவன் மயக்கமடைந்தான்.
பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் தாக்கப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு அவன் மரணம் அடைந்தது தெரியவந்தது.
அங்கு அவனை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அச்சிறுவன் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சிறுவனை அடித்துக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அடித்துக் கொன்றதாக அவனது சித்தியையும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவனது சகோதரர் மற்றும் சகோதரியையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுவனின் தாய் சம்பவ இடத்தில் இல்லை. அவர் தொழில் ரீதியான சுற்றுலா சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, சிறுவனின் மீது அக்கறையில்லாமல் இருந்ததற்காக அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.