பிரான்ஸ் தேர்தல்: அதிகாரத்தை கைப்பற்றும் தீவிர வலதுசாரிகள்- வெளிநாட்டவர் குடியுரிமைக்கு பேராபத்து?
பாரீஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமான வலதுசாரிகள் கட்சியான தேசிய பேரணிக் கட்சி (Le Rassemblement national RN) முன்னிலை பெற்று வருகிறது. இந்த கட்சி வெற்றி பெற்று பிரதமர் பதவியைக் கைப்பற்றிவிட்டால் பிரான்ஸில் பிறக்கும் குழந்தைகளுக்கான அந்நாட்டு குடியுரிமை ரத்து செய்யப்பட்டு வெளிநாடுகளைச் சேர்ந்தவருக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் அதிபர் ஆட்சி முறைதான். இம்மானுவேல் மேக்ரோன் பிரான்சின் அதிபராக இருந்து வருகிறார். பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதாக அதிபர் மேக்ரோன் அறிவித்தார்.

களத்தில் யார் யார்?: பிரான்ஸ் தேர்தல் களத்தில் அதிபர் மேக்ரோனின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி மற்றும் அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை களத்தில் உள்ளன. பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் பிரான்ஸ் தேர்தலில் தற்போதைய நிலையில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி முன்னிலையில் இருப்பது ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல உலக நாடுகளையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
தேசிய பேரணி என்ன நிலைப்பாடு?: பிரான்ஸின் வலதுசாரி கட்சியான தேசிய பேரணி என்பது இனவாதக் கருத்தியலைக் கொண்டது. யூத எதிர்ப்பை முன்னெடுக்கக் கூடியது. குறிப்பாக வெளிநாட்டவர் குடியேற்றங்களை கடுமையாக எதிர்க்கிறது. பிற நாட்டவர் குடியேற்றத்தால் பிரான்ஸின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் பேராபத்தில் இருக்கிறது என்கிற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்கக் கூடியது.
வலதுசாரிகள் முன்னிலை: தற்போதைய நிலவரப்படி பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிகளின் தேசிய பேரணி முதலிடத்திலும் இடதுசாரிகள் கூட்டணி 2-வது இடத்திலும் அதிபர் மேக்ரோனின் மையவாத கூட்டணி 3-வது இடத்திலும் இருக்கிறது. தேசிய பேரணி கட்சியினர் வென்றால் அதன் தலைவர் மரைன் லே பென் பிரதமராகக் கூடும்.
உற்சாகத்தில் வலதுசாரிகள்: அதாவது முதல் கட்ட தேர்தலில் வலதுசாரிகள் 33%; இடதுசாரிகள் 28%; அதிபர் மேக்ரோனின் மையவாத கூட்டணி 21% வாக்குகளைப் பெற்றுள்ளன. இந்த முதல் சுற்றில் எந்த அணியும் 50% வாக்குகளைப் பெறாததால் 2-வது கட்ட தேர்தல் ஜூலை 7-ல் நடைபெறும்.
முன்னிலை பெறும் வலதுசாரிகள்: 2-வது கட்ட தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் வலதுசாரிகளின் தேசிய பேரணிதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்படுகிறது. அதிபர் மேக்ரோன் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு காத்திருக்கிறது என்கின்றன இந்த கருத்து கணிப்புகள்.
குடியுரிமையில் வைக்கும் தேசிய பேரணி: நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவில் இந்த தேசிய பேரணி கட்சி பிரதமர் பதவியைக் கைப்பற்றினால் என்னதான் நடக்கும்? முதலில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் அதிகாரம் குறைந்துவிடும். அத்துடன் பிரான்ஸில் குடியேறும் பிறநாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையும். பிரான்ஸில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு இயல்பாகவே கிடைத்து வந்த குடியுரிமை இனி கிடைக்காமல் போகும். இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தவர் பலர் இப்படியான வகைகளில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இந்த குடியுரிமைகளையும் தேசிய பேரணி கட்சி ஆட்சி அமைத்தால் கேள்விக்குள்ளாக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை என கூறப்படுகிறது.
வெளிநாட்டவருக்கு நெருக்கடி: அதேபோல பிரான்ஸ் நாட்டில் சட்டவிரோத குடியேறிய மக்களுக்கும் இதுவரை இலவசமாக கிடைத்து வந்த மருத்துவ சேவைகளை தேசிய பேரணி அரசு நிச்சயம் தடை செய்யுமாம். பிரான்ஸின் அணு உலைகள், முதன்மை பாதுகாப்பு நிலையங்களில் பிறநாட்டவர் பணிபுரிவதில் கடுமையான கட்டுப்பாடுகளை தேசிய பேரணி அரசு நடைமுறைப்படுத்தக் கூடுமாம்.
இடதுசாரிகள் தீவிரம்: இத்தகைய பேராபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தேசிய பேரணியை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க 2-வது இடத்தில் உள்ள இடதுசாரிகள் கூட்டணி அதிதீவிரம் காட்டுகின்றன. அடுத்து கட்ட நாடாளுமன்ற தேர்தல் சுற்றுகளில் தேசிய பேரணியை வீழ்த்தும் வியூகத்தை கையில் எடுத்து இடதுசாரி கூட்டணி செயல்பட்டு வருகிறது. இந்த 2-வது நாடாளுமன்ற கட்ட தேர்தல் ஜூலை 7-ந் தேதி நடைபெற உள்ளது. இதன் பின்னரே பிரான்ஸ் நாட்டின் எதிர்காலம் என்ன? பிரான்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர் நிலைமை என்னவாகும் என்பதெல்லாம் தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
புதிய கூட்டணியா?: அதேநேரத்தில் அதிபர் மேக்ரோனின் மையவாத கூட்டணியும் இடதுசாரிகளும் இணைந்து புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியங்களும் உருவெடுத்துள்ளன. அதிபர் மேக்ரோனும் இதனை சுட்டிக்காட்டி வருகிறார்
ஏன் பின்னடைவு?: அதிபர் மேக்ரோனின் மையவாத கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்திப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், ரஷ்யா- உக்ரைன் இடையேயான யுத்தத்தில் உக்ரைன் பக்கம் மேக்ரோன் நின்றதை பிரான்ஸ் மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. காஸா இனப்படுகொலையில் இஸ்ரேலை ஆதரித்ததையும் பிரான்ஸ் மக்கள் நிராகரிக்கின்றனர். அதிபர் மேக்ரோன் ஆட்சியின் பொதுமக்கள் விரோத செயல்பாடுகளும் இந்த வெறுப்பின் உச்சத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரான்ஸில் பெரும் புயல் ஒன்று மையம் கொண்டிருக்கிறது!












Click it and Unblock the Notifications