பிரான்சில் ஒலித்த பொங்கலோ பொங்கல்.. சிறப்பாக நடந்த தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா
பாரிஸ்: பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா பிரான்சில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பொங்கல் விழா என்பது தமிழர் திருவிழா. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் வேறுபாடுகள் கடந்து கொண்டாடும் பண்டிகை ஆகும். தமிழ்நாட்டு மண்ணில் இருந்து வேறு மண்ணிற்கு சென்றாலும் தமிழர்களின் பாரம்பரியம் மறக்காது மக்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும் இது.

அந்த வகையில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா பிரான்சில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அடுத்துள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53 ஆவது ஆண்டு பொங்கல் விழா 15.01.2023 அன்று நடைபெற்றது. பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் பா.தசரதன் அனைவரையும் வரவேற்றார். பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோகுலன் கருணாகரன் விழாவிற்கு தலைமை தாங்கினார், பிரான்ஸ் தமிழ் சங்க துணைத்தலைவர் தளிஞ்சன் முருகையன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மலகோப் நகர மன்ற தாய் ஜக்குலின் பெலோம் உரையாற்றினார். மேலும், திரான்சி நகர மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன், பிரபாகரன், சித்தாரா அமைப்பின் தலைவர் தம்புசாமி கிருஷ்ணராஜ், பாவலர் அருணா செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு உரையாற்றினர். தளிஞ்சன் முருகையன் பொங்கலை பற்றி சிறப்புரையாற்றினார். பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பிரான்சில் வாழும் தமிழ் மக்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, பிரான்ஸ் தமிழ்ச்சங்கத்தின் துணைப்பொருளாளர் எலிசபெத் அமல்ராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
















Click it and Unblock the Notifications