டெலிகிராம் சிஇஓவுக்கு ஜாமீன்.. ஆனால் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது! பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு
பாரீஸ்: டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டிருந்தது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரான்ஸ் அரசு கூறியிருக்கிறது.
பாவெல் துரோவ் ரஷ்யாவில் பிறந்தவராவார். இருப்பினும் இவர் தனது குழந்தை பருவத்தை பெரும்பாலும் இத்தாலியில்தான் கழித்திருக்கிறார். தற்போது இவரிடம், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், கரீபியன் தீவு நாடான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவற்றின் குடியுரிமை இருக்கிறது. ரஷ்யாவில் டெலிகிராமின் அலுவலகத்தை துரோவ் வைத்து நடத்தி வந்தபோது ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டது.

அதாவது கடந்த 2010ம் ஆண்டு, உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள்? என்கிற விவரங்களை ரஷ்யா கேட்டு ஏழரையை கூட்டியது. ஆனால், பயனாளர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். எனவே, எங்களால் தகவல்களை தர முடியாது.. என துரோவ் வெளிப்படையாக மறுத்துவிட்டார். மட்டுமல்லாது, உள்ளூரில் இனி கடையை வைத்திருந்தால் நம்மை காலி செய்து விடுவார்கள் என்று உணர்ந்த அவர், அமெரிக்காவுக்கு ஜம்ப்பாகிவிட்டார்.
அமெரிக்கா மட்டும் என்ன உத்தம புத்திரரா? கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில்தான் திட்டமிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட அந்த தனிநபர் தகவல்களை தங்களுக்கு தருமாறு கேட்டது ஜோ பைடன் நிர்வாகம். ஒருமுறை தகவல்களை கொடுத்து விட்டால், எல்லா முறையும் இதையே மேற்கோள் காட்டி தகவல்களை பெற, பல்வேறு நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதை உணர்ந்த துரோவ், அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து அங்கிருந்து வெளியேறி விட்டார். தற்போது துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
இப்படி இருக்கையில் ஆக.24ம் தேதி அவர், பிரான்ஸ் வந்திருந்தபோது, அந்நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றிற்கு டெலிகிராம் செயலி காரணமாக இருக்கிறது என, ஏற்கெனவே பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் துரோவ் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், ஐக்கிய அரபு அமீரகமும் துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இப்படி இருக்கையில், துரோவ் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவரது வழக்கறிஞர் இதனை உறுதி செய்திருக்கிறார். துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications