கசியும் ஆயில்.. மொரீசியசில் சுற்றுச்சூழல் எமெர்ஜென்சி பிரகடனம்.. என்ன நடந்தது?
பாரீஸ்: கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதால் மொரீசியஸ் தீவில், சுற்றுச்சூழல் எமர்ஜன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற ஒரு தீவு மொரிஷியஸ். இதன் பெரும்பாலான வருவாய், சுற்றுலாவை சார்ந்தே இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது சுற்றுலா முற்றிலும் தடைபட்டு போயுள்ள நிலையில், மற்றொரு சிக்கலில் அந்த நாடு அகப்பட்டுக் கொண்டிருக்கிறது.
டேபிள் டாப்.. நீங்களே படத்தை பாருங்க.. இப்படி ரன்வே இருந்தால் எப்படி விமானத்தை நிறுத்த முடியும்?
கப்பலில் கசிவு
கடந்த மாதம் 25ம் தேதி இப்பிராந்தியத்தின் வழியாக பயணித்த MV Wakashio சரக்கு கப்பல், பவளப் பாறையில் மோதியது. அதில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், அதில் உள்ள எரிபொருள் கடலில் பெருமளவுக்கு கசியத் தொடங்கி உள்ளது. அந்த கப்பலில் சுமார் 4 ஆயிரம் டன் அளவுக்கு எரிபொருள் இருந்தது. அவை கடலில் கலப்பதால் கடல் முழுக்க, எண்ணை படலமாக காட்சியளிக்கிறது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதற்கு ஆதாரமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் நாடு தழுவிய சுற்றுச்சூழல் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
பிரான்ஸ் உதவி
அதேநேரம், தங்கள் நாட்டிடம் இந்த எண்ணையை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதால் பிரான்ஸ் நாட்டின் உதவியை மொரிஷியஸ் கேட்டுக்கொண்டுள்ளது. பருவ நிலை மோசமாக இருப்பதால் கடலில் அலைகள் அதிகம் எழுகின்றன. இந்த நிலையில் சுத்திகரிப்புப் பணி என்பது மேலும் சவாலாக இருக்கும் என்று மொரீசியஸ் வானிலை துறை எச்சரித்துள்ளது.
உதவ தயார்
பிரான்ஸ் நாட்டின், ரீயூனியன் தீவுகள் மொரிசியஸ் அருகாமையில் அமைந்துள்ளன. எனவேதான் பிரான்ஸ் நாட்டின் உதவியை கோரியுள்ளது மொரிஷியஸ். இதுபற்றி பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், பிரான்சின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் மொரீசியஸ். மேலும் பெரிய வர்த்தக கூட்டாளியும் ஆகும். எனவே மொரிசியசுக்கு உதவ வேண்டியது பிரான்ஸ் கடமை என்றார்.
கடல் நிலவரம்
'கிரீன்ஸ்பீஸ் ஆப்பிரிக்காவின்' காலநிலை மற்றும் எரிசக்தி மேலாளர் ஹேப்பி காம்புலே ஒரு அறிக்கையில், "டன்கணக்கான டீசல் மற்றும் எண்ணெய் இப்போது தண்ணீரில் கசிந்து வருகின்றன. புளூ பே, பாயின்ட் டி எஸ்னி மற்றும் மஹேபர்க் ஆகிய நீர்ப்பரப்பை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் மாசுபடுத்தும் எண்ணையால் பெரும் அபாயத்தில் உள்ளன. மொரீஷியஸின் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" இவ்வாறு ஹேப்பி காம்புலே கூறியுள்ளார்.