நீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்
Recommended Video
பாரிஸ்: இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் விவகாரத்தை பேசி தீர்க்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் எந்த மூன்றாவது நாட்டின் தலையீடோ அல்லது தூண்டுதலோ இருக்கக்கூடாது என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பாரிஸ் விமான நிலையத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது அத்துடன் இந்திய வம்சாவளியினர் , இந்திய தேசிய கொடிகளை ஏந்தி வரவேற்றனர். பின்னர் பாரிஸில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சான்ட்லி என்ற இடத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார்.
அங்கு இருவரும் இந்தியா பிரான்ஸ இடையிலான உறவுகள் குறித்து 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இம்மானுவேல், "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு குறித்து பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். இது அவர்களின் இறையாண்மைக்கு உள்பட்ட விஷயம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். காஷ்மீர் விஷயத்தில் எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடோ, அல்லது தூண்டுதலோ இருக்கவே கூடாது. நான் சில நாள்களுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச உள்ளேன் இப்போது இருதரப்பு (இந்தியா- பாகிஸ்தான்) பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவேன்" என்றார்.
முன்னதாக காஷ்மீர் விஷயத்தில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் பிரான்ஸ்அதிபர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மூன்றாம் நாடு தலையீடு இருக்கவேகூடாது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications