மொத்தமே 17 நாட்களே பாரீஸ் ஒலிம்பிக்! ஆனா காதலர் தலைநகருக்கு பறக்கும் 3 லட்சம் ஆணுறைகள்- என்ன மேட்டர்
பாரிஸ்: உலகமே எதிர்நோக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில வாரங்களில் காதலர்கள் தலைநகரான பாரீஸில் தொடங்க உள்ளது. இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிகளுக்காக வீரர், வீராங்கனைகளுக்கு 3 லட்சம் ஆணுறைகளை வழங்க ஒலிம்பிக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஒலிம்பிக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
காதலர்கள் தலைநகரான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் தயாராகி வருகிறது. இந்தாண்டு உலகமே எதிர்பார்க்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் உலகமே எதிர்நோக்கும் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாகும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஒலிம்பிக்: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்கத் தனியாக ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டிருக்கும். ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் இளைஞர்கள் தான் அதிகம் கலந்து கொள்வார்கள். அப்போது சில நேரங்களில் அவர்கள் நெருக்கமாகவும் இருப்பார்கள். இது தவறில்லை என்றாலும் அது பாதுகாப்பற்ற உடலுறவாக இருந்தால் வீரர், வீராங்கனைகள் இதனால் நோய்கள் ஏற்படலாம். இதைத் தடுக்க எப்போதும் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் நாடுகளே வீரர், வீராங்கனைகளுக்கு ஆணுறைகளை வழங்கும்.
இருப்பினும், கடந்த 2021இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனாவுக்கு நடுவே நடந்தது. இதனால் வீரர், வீராங்கனைகள் நெருக்கமாக இருக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். குறிப்பாக உடலுறவு கொள்வதைத் தடுக்கும் விதமாக கார்டுபோர்டுகளால் ஆன படுக்கைகளையும் கூட அமைத்தனர். இதை சில வீரர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்க்கவும் செய்தனர்.
3 லட்சம் ஆணுறைகள்: இப்போது பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் நிலையில், கொரோனா ஓய்ந்துவிட்டதால் இந்த முறை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சுமார் 3 லட்சம் ஆணுறைகளை வழங்க பாரீஸ் ரெடியாகி வருகிறது. இது தொடர்பாக ஒலிம்பிக் கிராமத்தின் இயக்குநர் லாரன்ட் மைச்சாட் கூறுகையில், "2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 300,000 ஆணுறைகளை வழங்க உள்ளோம்.
இங்கு வீரர்கள் பயிற்சியாளர், அதிகாரிகள் என மொத்தம் 14,250 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க உள்ள நிலையில், அவர்களுக்கு அளிக்க 3 லட்சம் ஆணுறைகளை ரெடியாக வைத்துள்ளோம். பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் விளையாட்டு வீரர்கள் மிகவும் உற்சாகமாகவும் சவுகரியமாகவும் உணரக்கூடிய இடத்தை உருவாக்க விரும்புகிறோம். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: 1980களில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பரவல் அதிகரித்த நிலையில், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த 1988ஆம் ஆண்டு சியோலில் ஒலிம்பிக் போட்டிகளில் முதல்முறையாக ஆணுறைகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆணுறைகள் வழங்கப்படுவது தொடர்கிறது. 2000இல் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் முதலில் 70,000 ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டன. இருப்பினும், அது போதுமானதாக இல்லை. இதனால் கடைசி நேரத்தில் கூடுதலாக 20,000 ஆர்டர் செய்தனர்.
கடந்த காலங்கள்: சால்ட் லேக் சிட்டியில் நடந்த 2002 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதல்முறையாக ஒரு லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டோக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.5 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டன. 2016இல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிம்பிக் வரலாற்றில் அதிகபட்சமாக 4.5 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications