பறவையால் அந்தரத்தில் தவித்த 175 பயணிகள்.. டெல்லி இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை.. ஷாக்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து இன்று காலையில் டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்படும்போதே அதன்மீது பறவை மோதியது. இதனால் விமான இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானத்தில் பயணித்த 175 பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன. இந்நிலையில் தான் இன்று காலையில் பாட்னாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் மொத்தம் 175 பயணிகள் இருந்தனர். இதுதவிர பைலட்டுகள், விமான பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேய திடீரென்று இன்ஜினில் பிரச்சனை ஏற்பட்டது.
விமானத்தின் ஒரு இன்ஜினில் இருந்து பலமான அதிர்வுகள் ஏற்பட்டது. இதையடுத்து உடனே சுதாரித்த விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்து அவசர அவசரமாக விமானத்தை திருப்பி மீண்டும் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கினர். விமானத்தில் இருந்த 175 பயணிகள், விமான பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலேழும்பி புறப்பட்டபோது அதன் மீது பறவை மோதியதும், அதன்பிறகு இன்ஜினில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதும் தெரியவந்தது. இதுபற்றி பாட்னா விமான நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‛‛IG05009 பாட்னா - டெல்லி விமானம் இன்று காலை 8.42 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டது. அப்போது விமானத்தின் மீது பறவை மோதியது. விமான நிலையத்தின் ஓடுதளத்தை ஆய்வு செய்தபோது இறந்த பறவை மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் விமானத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தின் இன்ஜினில் அதிர்வும் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் பாட்னாவிற்கு மீண்டும் வந்தது. ஓடுபாதை 7 ல் காலை 09.03 மணிக்கு மீண்டும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications