65 லட்சம் பேர் நீக்கம்.. பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. வாக்காளர்கள் 7.24 கோடியாக சரிவு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.24 கோடியாக சரிந்துள்ளது.
பீகாரில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர் திருத்தம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பது ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக நடைபெறுவதாக குற்றம்சாட்டியது.

மேலும் நாடாளுமன்றத்தில் இந்த 2 விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் சபையை முடக்கி வருகின்றன. இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஏதேனும் திருத்தம் செய்ய கோரினால் உடனடியாக தேர்தல் அதிகாரியை அணுகலாம். பொதுமக்கள், அரசியல் கட்சிகள் செப்டம்பர் 1-ம் தேதி வரை பெயர்களை சரிபார்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து அதன்படி தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.24 கோடியாக உள்ளது. இந்த சிறப்பு திருத்த நடவடிக்கை மூலமாக இறந்தவர்கள் என்ற வகையில் 22.34 லட்சம் பேரின் பெயர்களும், நிரந்தரமாக வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில் 36.298 லட்சம் பேரும், இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்திருந்த வகையில் 7.01 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் பாட்னாவில் உள்ள 3.95 லட்சம் வாக்காளர்கள், மதுபனி மாவட்டத்தில் உள்ள 3.52 லட்சம் வாக்காளர்கள், கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் இருந்து 3.16 லட்சம் வாக்காளர்கள், கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 3.10 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு முன்பாக இருந்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 7.9 கோடியில் இருந்து தற்போது 7.24 கோடியாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications