அடேங்கப்பா.. மணமகன் மார்க்கெட்டா.. 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடைமுறை.. யூனிபார்முடன் வெயிட்டிங்
பாட்னா: பீகார் மாநிலத்தில் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த மணமகன் மார்க்கெட் இன்று வரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆட்டு சந்தை, மாட்டு சந்தை, காய்கறிகளுக்கான சந்தை, துணி சந்தை என ஆங்காங்கே நாம் பார்த்திருப்போம். அது போல் தானியங்கள், பூக்கள், பழங்களுக்கான சந்தையையும் பார்த்து பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் மணமகன்களை தேர்வு செய்யவும் ஒரு மார்க்கெட் இந்தியாவில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பீகார் மாநிலத்தில்தான் ஆண்டுதோறும் மணமகன்கள் வரிசைப்படுத்தப்பட்டு நிற்க வைக்கப்பட்டு அவர்களின் சமூக தகுதிக்கேற்ப அவர்களை பெண் வீட்டார் தேர்வு செய்கிறார்கள்.
மணமகன் மார்க்கெட்
இந்த மணமகன் மார்க்கெட் நடக்கும் சீசனுக்கு பெயர் சவுரத் சபா ஆகும். இது உலகிலேயே மிகவும் பழங்கால வரன் பார்க்கும் முறையாகும். சுமார் 700 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை இந்த மக்கள் கொண்டிருக்கிறார்கள். மாப்பிள்ளைகள் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட், வேஷ்டி அணிந்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மணமகன் தேர்வு
மணமகனை தேர்வு செய்யும் முன்பு அவருடைய கல்வித் தகுதி, வேலை, ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை பெண் வீட்டார் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் பிறகுதான் மணமகனை பார்க்க செல்ல வேண்டும். இந்த மணமகன் தேர்வு முறை என்பது ராஜா ஹரி சிங் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
7 தலைமுறை
மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே 7 தலைமுறைகளுக்கு ரத்த உறவுகள் இருக்கக் கூடாது. ஒரே வகை ரத்தமும் இருக்கக் கூடாது. 9 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த சவுரத் சபா மதுபானியின் பழத்தோட்டத்தில் நடத்தப்படுகிறது. பீகாரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மைதிலி சமுதாயத்தினர் இந்த மாப்பிள்ளை மார்க்கெட்டில் பங்கேற்பார்கள்.
வரதட்சணை கொடுமை
இது பெரும்பாலும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்காகவே இந்த முறை கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு கொடுக்கப்படும் வரதட்சிணையின் மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகும். இந்த தொகை கிட்டதட்ட பொது சுகாதார திட்டங்களுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையாகும். மணமகனை மணமகளின் தந்தையோ, சகோதரனோ உறவினரோதான் தேர்வு செய்வர். இதில் பெண்ணின் விருப்பம் ஏதும் கேட்கப்படாதாம். இந்த நடைமுறை கிட்டதட்ட சுயம்வரம் போன்ற ஒரு நடைமுறையாகும்.