பிரச்சாரத்திலேயே கொலை! நாடே உற்றுநோக்கிய தொகுதியில்.. குற்றவாளியே வெற்றி! யாரிந்த 'சோட்டே சர்க்கார்'
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் மோகாமா தொகுதியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) வேட்பாளர் அனந்த் குமார் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) வேட்பாளர் வீணா தேவியை 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஜன சுராஜ் கட்சியின் தேர்தல் பணியாளர் துளார் சந்த் யாதவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, அனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

அனந்த் குமார் சிங் 91,416 வாக்குகளையும், ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் 63,210 வாக்குகளையும் பெற்றார். மோகாமா கொலை வழக்கில் கைதான ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் சிங், 'சோட்டே சர்க்கார்' என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார்
ஆதரவாளர்களிடையே 'சோட்டே சர்க்கார்' என்று அறியப்படும் அனந்த் சிங், 2005 முதல் மோகாமா அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். JD(U) இலிருந்து சுயேச்சை வேட்பாளராகவும், பின்னர் RJD ஆகவும் கட்சி மாறி இருந்தாலும், அவரது செல்வாக்கு குறையவில்லை. சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 2022-ல் அவரது அரசியல் பயணம் தடைபட்டது.
அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு, RJD கட்சி அவரது மனைவி நீலம் தேவியை இடைத்தேர்தலில் நிறுத்தியது. அவர் அத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். இப்போது, பாட்னா உயர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பிறகு, அனந்த் சிங் மீண்டும் தேர்தலில் போட்டியிடத் திரும்பியுள்ளார்.
கொலை வழக்கில் கைதான் வேட்பாளர்
அனந்த் குமார் சிங் மீது 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவரது பிரமாணப் பத்திரம் தெரிவிக்கிறது. தற்போது தேர்தல் பரப்புரையின்போது ஜன சுராஜ் ஆதரவாளர் துலார்சந்த் யாதவ் கொலையில் தொடர்புடையதாகக் கைதாகியுள்ளார். கடந்த வாரம் பாட்னாவுக்கு அருகிலுள்ள மோகாமாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதலில் துலார்சந்த் யாதவ் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாதவ் ஜன சுராஜ் கட்சியின் பியூஷ் பிரியதர்ஷிக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஜன சுராஜ் கட்சி வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷி தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். உள்ளூர் தலைவரும் முன்னாள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான 75 வயதான துலார்சந்த் யாதவ் உடன் இருந்தார். அதே வழியில் அனந்த் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வந்ததாகக் கூறப்படுகிறது.
இரு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கற்கள் வீசி எறியப்பட்டு, மோதல்களாக மாறியது. இதில் துலார்சந்த் யாதவ் படுகாயமடைந்து உயிரிழந்தார். யாதவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மார்பு மற்றும் நுரையீரலில் கடினமான மற்றும் கூர்மையற்ற பொருளால் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் இருதயச் செயலிழப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளார் என்று பாட்னா எஸ்.எஸ்.பி. கார்த்திகேய ஷர்மா தெரிவித்தார்.
ஒப்புக்கொண்ட அனந்த் குமார் சிங்
இந்தச் சம்பவம் மோகாமா தால் பகுதியில், படாவூர் மற்றும் கோஸ்வாரி காவல் நிலையங்களுக்கு அருகில் நிகழ்ந்தது. அனந்த் குமார் சிங் பின்னர் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றவாளியான அனந்த் குமார் சிங், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்துள்ளார். இந்த வழக்கில்தான் தற்போது அவர் கைதாகி உள்ளார்.
அனந்த் குமார் சிங், 'சோட்டே சர்க்கார்' என்று பிரபலமாக அறியப்படுபவர். அவரது பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் மீது 28 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் மோகாமாவில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2022-ல், யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தனது மனைவிக்கு அத்தொகுதியை விட்டுக்கொடுத்தார். பின்னர், பாட்னா உயர் நீதிமன்றத்தால் அண்மையில் அவர் விடுவிக்கப்பட்டார். இம்முறை தனது மனைவியிடம் தொகுதியை ஒப்படைக்காமல், தானே போட்டியிடுவதாக சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications