தேஜஸ்வி யாதவ் எழுச்சி.. ஆனா வெற்றியை தீர்மானிப்பது பிரசாந்த் கிஷோர்தான்! மாறும் பீகார் தேர்தல் களம்
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். அவருக்கு பரவலாக ஆதரவு இருந்தாலும் வெற்றியை தீர்மானிக்கப்போவது என்னவோ பிரசாந்த் கிஷோர்தான் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, பீகாரில் கணிசமாக வாக்குகளை பிரிக்கும் என்றும், மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்பதை இவரது கட்சிதான் தீரமானிக்கும் நிலை ஏற்படும் சூழல் இருக்கிறது.

பீகாரில் மகாபந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு விஷயத்தில் கடுமையான குழப்பங்கள் ஏற்பட்டன. அப்போது ராகுல் காந்தி நேரடியாக இதில் தலையிட்டார். அவர் லாலு பிரசாத் யாதவ் உடன் பேச்சுவார்ததை நடத்தினார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட்டை ராகுல் காந்தி பாட்னாவுக்கு அனுப்பினார். பின்னர் பஞ்சாயத்துகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தன.
இதன் தொடர்ச்சியாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவை தனது முதலமைச்சர் வேட்பாளராக மகாபந்தன் அறிவித்தது. இந்த அறிவிப்பை வாரங்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதமும், தயக்கமும் தாமதப்படுத்தியது. இருப்பினும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்ததன் மூலம் மகாபந்தன் மீண்டும் உற்சாகம் பெற்றது.
மறுபுறம் என்டிஏ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று கூட்டணியில் உள்ள பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் சரிசமமான அளவு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இரண்டாவது காரணம், பாஜகவுக்கு என பீகாரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உள்ளூர் முகங்கள் கிடையாது. பீகாரில் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். நிதிஷ்குமாரை இனியும் நம்பியிருக்க முடியாது. எனவே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்தார். தற்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்டாலும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்வியை அவர் தவிர்த்தார்.
2020 பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகாபந்தனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. வெறும் 0.03% வாக்கு வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் காரணமாகவே, பாஜக இப்போது நிதீஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது.
சிராக் பஸ்வானுக்கு முக்கியப் பங்கை அளிக்க பாஜக தலைமை முடிவு செய்தது. அவரது லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 29 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிராக் பஸ்வான் ஒரு இளம் தலித் தலைவராக முன்னிறுத்தப்படுகிறார். இவர் தனது சொந்த சமூகமான பஸ்வான்களின் தலைவராக மட்டுமல்லாமல், தலித் சமூகத்தின் பிரதிநிதியாகவும் அறியப்படுகிறார். பஸ்வான்கள் பீகார் மக்கள் தொகையில் 5% உள்ளனர்.
தேஜஸ்வி யாதவ், சிராக் பஸ்வான் என என்னதான் இளம் தலைவர்கள் பீகாரில் ஆதிக்கம் செலுத்தினாலும் வெற்றியை தீர்மானிப்பது பிரசாந்த கிஷோராகத்தான் இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பழைய முகங்களையும், அரசியலையும் வெறுத்த பீகார் மக்களே! சாதி அரசியலைக் கடந்து தங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த எனது கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரசாந்த் கிஷோர் முன்னெடுத்த அரசியல், பீகாரில் ஓரளவுக்கு ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் பிரஷாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி தலைப்புச் செய்திகளை உருவாக்கி, மக்களின் கவனத்தை ஈர்த்து, இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்த கட்சி நிச்சயம் ஆட்சியை கைப்பற்றாது. ஆனால் குழப்பத்தை உருவாக்கும். அதாவது பிரசாந்த் கிஷோர் வருவதற்கு முன்னர் பீகாரில் இரண்டு பிரிவுகள்தான் இருந்தன. ஒன்று தேஜஸ்வி யாதவ், இன்னொன்று நிதிஷ்குமார். எதிர்ப்பு வாக்குகளை அதிகமாக பெறும் கட்சி வெற்றியடையும். ஆனால் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க மூன்றாவதாக ஒரு கட்சி நுழையும்போது, ஆதரவு வாக்குகள் குறைவான அளவு இருந்தாலே வெற்றி நிச்சயம்.
பாஜகவும் அதைத்தான் விரும்புகிறது. பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சராக நிதிஷ்குமார் இருக்கிறார். அவருக்கு எதிரான அதிருப்திகளை தங்களது ஆதரவு வாக்குகளாக மாற்றும் தேஜஸ்வி யாதவ் கூட்டணியின் யுக்தியை முறியடித்து, எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாமல் இருக்கும் வகையில் தேர்தலை பிரசாந்த் கிஷோர் மாற்றுவார் என்றும், பின்னர் அவர் ஆதரவாளிக்கும் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications