நிதிஷ்குமார்தான் அடுத்த முதலமைச்சர்.. வழிக்கு வந்த பாஜக! மகாராஷ்டிரா ஸ்டைல் தோல்வியா?
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், நிதிஷ்குமார் உதவியில்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலையில்தான் இன்னமும் இருக்கிறது. எனவே நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்க பாஜக ஒப்புக்கொண்டிருக்கிறது. வரும் 20ம் தேதி நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றம் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக அளவில் மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு அதிகமாக இருப்பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணி கணக்கு போட்டிருந்தது. வெற்றிக்கு 122 தொகுதிகள் தேவை. ஆனால் ஜேடியு, பாஜக அடங்கிய என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது.

இருப்பினும் மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்பதில் பஞ்சாயத்து நிலவியது. மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்த பாஜக, கடைசியில் தங்கள் கட்சியை சேர்ந்தவரை முதலமைச்சராக அமர்த்தியிருக்கிறது. அதேபோல பீகாரிலும் பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும், நிதிஷ்குமார் கைவிடப்படுவார் எனவும் சொல்லப்பட்டு வந்தது. ஏனெனில் பீகார் தேர்தலின்போது தங்கள் முதலமைச்சர் யார் என்பதை என்டிஏ கூட்டணி சொல்லவில்லை.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில்தான் போட்டியிடுகிறோம் என்று கூறி வந்த அமித்ஷா, தேர்தல் முடிந்த பின்னர் முதலமைச்சரை முடிவு செய்வோம் என்று சொன்னார். எனவே பாஜக நிச்சயம் நிதிஷ்குமாரை கழற்றிவிடும் என்று பலரும் கூறினர். ஆனால், நிதிஷ்குமார்தான் அடுத்த முதல்வர் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக 89 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களைப் பெற்றது. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM), மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளும் சிறப்பாகச் செயல்பட்டன.
அடுத்த அமைச்சரவை குறித்து முடிவெடுக்க நேற்று டெல்லியில் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதில், புதிய அமைச்சரவையில் பாஜக அதிக இடங்களை ஒதுக்கவும், அதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் இடங்களைப் ஒதுக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு ஆறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் அமைச்சரவை திட்டம் வகுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.
பாஜகவுக்கு 15 அல்லது 16 அமைச்சர் பதவிகள் கிடைக்கும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 14 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் சிராஜ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 3 அமைச்சர் பதவிகளும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஜ்யசபா எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) ஆகியவற்றுக்கு தலா ஒரு அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரதமரிடம் தேதி இறுதி செய்யப்பட்டதும், நவம்பர் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் தேதி உறுதி செய்யப்படும். பாட்னாவின் காந்தி மைதானத்தில் இதற்கான விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications