அன்று உதயநிதி விதைத்த விதை.. அதே யுத்தியை கையிலெடுத்து இன்று பீகாரிலும் மக்கள் போராட்டம்
பாட்னா: பீகார் மாநிலம் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதமாவதை அடுத்து அப்பகுதி மக்கள் செங்கற்களுடன் போராட்டம் நடத்தினர். ஒரு லட்சம் செங்கற்களை மத்திய அரசுக்கு அனுப்பவும் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது. போராடியது பீகார் மக்களாக இருந்தாலும் அதற்கான விதை என்னவோ உதயநிதி ஸ்டாலின் போட்டதுதான்!
கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என தெரிவித்தார். எனினும் நீண்டகாலமாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவது என்பது குறித்து அறியாமல் மாநில அரசு மண்டையை உடைத்துக் கொண்டது.
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனையை தர்பங்காவில் அமைக்கலாம் என அறிவிப்பு வெளியானது. பீகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னரே எய்ம்ஸ் மருத்துவமனையை தர்பங்காவில் அமைப்பதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்த நிகழ்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்ததோடு சரி, ஒரு செங்கல்லையும் நகர்த்தவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி 2020 செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 2024 ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை தர்பங்காவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தர்பங்கா
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தர்பங்காவில் அமைக்க பீகார் அரசுக்கு நெருக்கடி கொடுத்து அடிக்கல் நாட்டு விழா நடத்த மாணவர் சங்கத்தினர் வீடு வீடாக சென்று செங்கல்லை சேகரிக்கும் முயற்சியில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க விரும்பும் நூற்றுக்கணக்கான மக்களை இந்த திட்டம் கவர்ந்தது.

தர்பங்காவில் ஒரு லட்சம் செங்கல்கள்
தர்பங்காவில் உள்ள மக்களிடம் இருந்து ஒரு லட்சம் செங்கற்களை மாணவர் சங்கத்தினர் சேகரித்தவுடன் அதை மத்திய அரசுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். இந்த போராட்டத்தை தொடர்ந்து அடிக்கல் நாட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே 30 ஆயிரம் செங்கற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தர்பங்காவில் எய்ம்ஸ் அமையும் இடமானது மழை வெள்ளம் வந்தால் தண்ணீர் தேங்கும் நிலையில் இருக்கிறது.

இடத்தை சமன் செய்ய கோரிக்கை
இந்த இடத்தை முதலில் சமன் செய்தால்தான் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்க முடியும். ஆனால் மாநில அரசோ இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தர்பங்கா பகுதி மக்கள் எய்ம்ஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செங்கற்களுடன் போராட்டம் நடத்தினர். மேலும் வரும் 2024 ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடிப்பது சாத்தியமில்லை என அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். பீகாரில் கூட்டணி அரசு அமைந்துள்ளது., எனினும் எய்ம்ஸ் அமைய இத்தனை தாமதம் ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பூமி பூஜையும் அதே ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டு 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெறுவதற்காக பாஜக சார்பில் சொல்லப்படுகிறது. 45 மாதங்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடிக்கல் நாட்டி 31 மாதங்கள் கடந்தன.

கட்டுமான நிதி ஒதுக்கீடு
இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதால் சுற்றுச் சுவர் கட்டும் பணியும் நின்று போனது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது இல்லை. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதி இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. செங்கல்லுடன் உதயநிதி பிரச்சாரம் செய்ததோடு நிற்கவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகு அந்த செங்கல்லை திமுக தலைவரும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு பரிசாகவும் அவர் கொடுத்தார். இப்படியாக உதயநிதி அன்று போட்ட பிள்ளையார் சுழியால் இன்று பீகாரிலும் செங்கல்லுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மக்கள் போராடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications