கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு நிதி உதவி வழங்க முடியாது-பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி
பாட்னா: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
நாட்டில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்று. பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சாப்ராவில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வந்தது.
சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பீகார் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது.

கள்ளச் சாராய மரணங்கள் பீகார் அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளன. ஆளும் ஜேடியூ-ஆர்ஜேடி கூட்டணி அரசுக்கும் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் எதிராக பாஜக போர்க்கொடி தூக்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அம்மாநில ஆளுநரையும் சந்தித்து முறையிட்டது பாஜக. கள்ளச் சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் பாஜகவின் கோரிக்கை.
நாடாளுமன்றத்திலும் பீகார் கள்ளச் சாராய மரணங்கள் எதிரொலித்தன. ராஜ்யசபாவில் பீகார் பாஜக எம்.பி.க்கள் இந்த விவகாரம் குறித்து கூச்சலிட்டு முழக்கமிட்டனர். இதனால் ராஜ்யசபாவில் அமளி நிலவியது. பாஜக எம்.பி.க்களின் இந்த அமளியால் சபை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் போயுள்ளது. பீகார் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆரியவர்த்த மகாசபை சார்பாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உடனே விசாரணைக்கு ஏற்க மறுத்தது. உரிய நடைமுறைகளின் கீழ் இப்பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனிடையே பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் இச்சம்பவம் தொடர்பாக பேசியதாவது: கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தால் அரசு சார்பாக எந்த நிவாரண நிதியும் வழங்கமாட்டோம். நீங்கள் மது அருந்தில், கள்ளச் சாராயம் குடித்தால் உயிரிழப்பது உறுதி. மது குடிப்பதற்கு ஆதரவாக பேசுகிறவர்களால் மது குடிப்பவர்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடாது. ஆகையால் மது குடிக்காமல் இருப்பது நல்லது.
மதுவிலக்கு சட்டம் என்பது என்னுடைய விருப்பம் அல்ல. இந்த மாநிலப் பெண்களின் நன்மைக்காகவே மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. சாப்ரா கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக விசாரிக்க 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் கள்ளச் சாராயம் குடித்தவர்கள் குறித்து விசாரிக்கக் கூடாது; கள்ளச் சாராயத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்கும் குண்டர்களைத்தான் தண்டிக்க வேண்டும்; அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மதுவிலக்கு இல்லாத பல மாநிலங்களிலும் கள்ளச்சாராய விற்பனையும் கள்ளச்சாராய மரணங்களும் நிகழ்கின்றன. பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற மதுவிலக்கு கொள்கை நல்ல பலனை ஏற்படுத்துகிறது. இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தப் பேச்சும் சர்ச்சையாகி உள்ளது. மது அருந்தினால் மரணம் நிச்சயம் என எப்படி முதல்வர் நிதிஷ்குமார் பேசலாம் என கொந்தளித்துக் கொண்டிருக்கிறது மாநில பாஜக.












Click it and Unblock the Notifications