பீகார் சட்டமன்ற தேர்தல்.. கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க மறுத்த தேஜஸ்வி.. பின்னணி
பாட்னா: கடந்த முறை லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக இடம் வழங்கிய ஆர்ஜேடி கட்சி, இந்த முறை பீகார் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் தேர்தலுக்கு பின்னர் கூட்டணிகள் உடைக்கப்படும் என்பதுதான். அதேபோல் கடந்த முறை தேர்தல் தோல்விக்கு கூட்டணிக்கு அதிக இடங்களை ஒதுக்கியது முக்கிய காரணம் என்பதால், அந்த முறைஅதிக இடங்களில் ஆர்ஜேடி போட்டியிடுகிறது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சி தாராளமாக அதிக இடங்களை வழங்கியது. மாநிலத்தில் 19 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது இதனால் லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இந்த முறை சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் தேஜஸ்வி யாதவ் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அதிக இடங்களில் ஆர்ஜேடி கட்சி போட்டியிடுகிறது.

ஆர்ஜேடி அதிரடி
ஆர்ஜேடி கட்சி 144 இடங்களில் போட்டியிடுகிறது, காங்கிரஸ் 70 இடங்களிலும், சிபிஎம், சிபிஐ உள்பட மூன்று இடது கட்சிகளும் 29 இடங்களில் போட்டியிடுகின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலம் முழுவதும் தொண்டர்களை தீவிரமாக களப்பணியாற்றும்படி வலியுறுத்தியுள்ளார். கூட்டணி கட்சியினரை அனுசரித்து அவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

தலித்துகள் ஆதரவு
தேஜஸ்வி யாதவின் தந்தையும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் அதிகாரத்தில் இருந்தபோது, பெரும்பாலான பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் ஆதரவு ஆர்ஜேடிக்குத் தான் கிடைத்து வந்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அதை பிரித்து விட்டது.

புரிந்து கொண்டனர்
கடந்த முறை 2015 தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது என்பது எளிதான காரியமாக லாலுவுக்கும் நிதீஷ்க்கும் இருக்கவில்லை. ஏனெனில் லாலு பிரசாத்தின் வலுவான சமூக தளம் மற்றும் நிதீஷ் குமாரின் தலைமையின் ஒருங்கிணைப்பு ஆகிய வலிமையால் மட்டுமே வென்றார்கள். அதன் காரணமாகவே 2015 சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி கட்சி 80 இடங்களை வென்றது என்பதையும் ஆர்ஜேடி கட்சியினர் புரிந்து கொண்டுள்ளனர்.

கூட்டணி கட்சிகள் விலகல்
நிதீஷ்குமார் திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆர்.ஜே.டி கட்சியை வெட்டி விட்டு நம்பிக்கை துரோகம் செய்தார். அத்துடன் ஆர்.ஜே.டி தலைமையிலான கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி), விகாஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி) மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) போன்ற சிறிய கட்சிகள் இப்போது வெளியேறிவிட்டனர். இது ஆர்ஜேடிக்கு மேலும் சவால்களை அதிகரித்துள்ளது.

கரையேறுவாரா?
எனினும் இந்த சிறிய கட்சிகள் போனால் போகட்டும் என்று தேஜஸ்வி நினைக்க காரணம், இவர்கள் வென்றாலும் தேர்தலுக்கு பின்னர் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்ப முடியாது என்பது தான். இவர்களை எதிர்க்கட்சி கூட்டணி குதிரை பேரம் மூலம் வேட்டையாடி விடும் என்று தேஜஸ்வி நம்புகிறார். அதனால் தான் நடப்பது நடக்கட்டும் நாமே அதிக இடங்களில் போட்டியிடும் என்று களத்தில் இறங்கி உள்ளார் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ். அப்பாவை போல் சாமர்த்தியமாக வென்று முதல்வராவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications