தோல்வியில் சதத்தை நெருங்கும் ராகுல்! தேர்தலுக்கு தேர்தல் பரிதாபமாகும் காங்., ஆர்ஜேடிக்கும் செம அடி!
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை கடும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்தியா கூட்டணியின் மிகப்பெரும் கட்சியாக இருந்தாலும் காங்கிரஸின் செயல்பாடுகள் பீகாரில் ஆர்ஜேடியின் வாக்கு வங்கியையும் கடுமையாக பாதித்துள்ளதாக கூட்டணிக்குள்ளேயே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. பீகார் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை இந்தியா கூட்டணி கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸின் செயல்பாடுகள் பண்ணையார் தனமாக இருந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் ஆர்ஜேடியும் தனது வாக்கு வங்கியை மொத்தமாக இழந்து விட்டதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.
இந்தியா முழுமைக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ஜேடியூ கூட்டணி. அதே நேரத்தில் எதிர் தரப்பில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்று தந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் வரும் நான்கு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. மேலும் பெரும் வாக்கு பலத்துடன் இருந்த ஆர்ஜேடியும் கடும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
பீகார் காங்கிரஸ் தோல்வி
தற்போதைய சூழலில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே ஆர்ஜேடி முன்னிலையில் உள்ளது. இது ஒரு புறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. பீகார் தேர்தலோடு சேர்த்து இதுவரை 95 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேர்தல் தோல்வியில் சதத்தை நெருங்கி வருகிறார் ராகுல் காந்தி. இந்த தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடுகள் ஆர்ஜேடியின் வாக்கு வங்கியையே பாதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
காங்கிரஸ் பின்னடைவு
2014ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. முக்கிய தேர்தல்கள் என்று பார்க்கும்போது 2014, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 2014 இல் 44 இடங்களிலும், 2019ல் 52 இடங்களிலும், 2024 மட்டுமே ஓரளவு அதிக இடங்களை அதாவது 99 எம்பி சீட்டுகளை வென்றது. அதே நேரத்தில் உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது.
ராகுல் காந்தி மீது விமர்சனம்
பஞ்சாபில் 2017 வெற்றி பெற்றாலும், அதற்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. இடையில் 2023 கர்நாடகாவில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது பீகார் தோல்வியின் மூலம் ராகுல் காந்தியை சுற்றி உருவாக்கப்பட்ட 'தொடர் தோல்வி நாயகன்' என்ற இமேஜ் இன்னும் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் தலைமை போட்டி, சீனியர் ஜூனியர் பிரச்சனை என பல காரணங்களை சொல்லலாம். மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கூட்டணி என்ற பிரச்சனையும் காங்கிரசுக்கு பலத்த பின்னடைவை தந்துள்ளது.
பீகார் தேர்தல் பகுப்பு
உதாரணத்திற்கு தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி - கேரளாவில் எதிர்க்கட்சி, தேசிய அளவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியில் இருந்த போதும் டெல்லியில் தனித்துப் போட்டி, திரிணாமுல் காங்கிரஸுடன் போட்டி என ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலைப்பாடு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பாஜக கைவசப்படுத்திய ஓபிசி, இபிசி, பட்டியலின மக்கள் வாக்குகளை பெற காங்கிரஸ் முயலவில்லை.
காங்கிரஸ் அரசியல் பிரச்சனை
காங்கிரஸ் பொறுத்தவரை பண்ணையார் கட்சி என்ற இமேஜ் இன்னும் தொடரும் நிலையில் இளம் தலைமுறைக்கு இடமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்னமும் தொடர்கிறது. பீகார் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் எங்கெல்லாம் கூட்டணி சேர்கிறதோ அந்த கூட்டணியே பலவீனமாகும் என்ற கூற்று தற்போது மீண்டும் உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் என்றாலே ராகுல், சோனியா, பிரியங்கா என கட்டமைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மக்களிடம் இன்னும் செல்லவில்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. மாநில அளவு என்று இல்லாமல், தேசிய அளவில் ஒரே கூட்டணியை அமைக்க வேண்டும், இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும் என்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தால் இனியாவது காங்கிரஸ் வெற்றி பாதைக்கு திரும்பலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications