பீகாரில் 2010ல் நடந்த அதே சம்பவம்.. அப்படியே 15 ஆண்டுக்கு பின் நடந்திருக்கு.. அடித்து தூக்கிய என்டிஏ
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அடைந்துள்ள வெற்றி, 2010 சட்டசபைத் தேர்தலின் ஜெராக்ஸ் காப்பி போல் அமைந்துள்ளது. அந்த வெற்றியை பலரும் "Miracle of 2010" என்று கூறி வந்த சூழலில், இந்த வெற்றி என்டிஏ கூட்டணியின் மேஜிக் என்று கூறி வருகின்றனர்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை என்டிஏ கூட்டணி 191 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 48 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால் கிட்டத்தட்ட என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.

பீகாரில் என்டிஏ கூட்டணியில் உள்ள ஜேடியூ மற்றும் பாஜக இடையில் யார் அதிக தொகுதிகளை வெல்வார்கள் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக 87 தொகுதிகளிலும், ஜேடியூ 77 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. என்டிஏ கூட்டணியின் இந்த வெற்றிக்கு மகளிர் வாக்குகள் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக மகளிரின் வங்கி கணக்கில் நேரடியாக சுயதொழில் செய்வதற்காக ரூ.10 ஆயிரம் செலுத்தப்பட்ட திட்டம், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 125 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
என்டிஏ கூட்டணியின் இந்த வெற்றி 2010 பீகார் சட்டசபைத் தேர்தலை பலருக்கும் நினைவுப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் 2010ல் என்டிஏ கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஜேடியூ 115 தொகுதிகளிலும், 0பாஜக 91 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பலரும் NDA Repeats their "Miracle of 2010" victory in Bihar Assembly Elections என்று அழைப்பார்கள். ஏனென்றால் 2005 சட்டசபைத் தேர்தலில் என்டிஏ ஆட்சி அமைத்திருந்தது.
அப்போதைய தேர்தலில் ஜேடியூ 88 தொகுதிகளிலும், பாஜக 55 தொகுதிகளிலும் வென்றிருந்தன. ஆனால் 2010ல் அதனை விடவும் பெரிய வெற்றியை என்டிஏ கூட்டணி பீகாரில் பெற்றது. அதேபோல் 2010ல் ஆர்ஜேடி வெறும் 22 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது. இதனால் மீண்டும் அதேபோன்ற ஒரு நிலை உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications