"இடதுசாரிகள்".. பீகாரில்.. பிச்சு உதறிட்டாங்க.. செம பெர்பார்மன்ஸ்!
பீகாரில் கம்யூனிஸ்ட்களுக்கு புதிய வெற்றி கிடைத்துள்ளது
பாட்னா: இடதுசாரிக் கட்சிகளுக்கு மிகப் பெரிய தீர்ப்பு பீகார் தேர்தலில் கிடைத்துள்ளது... சோர்ந்து கிடந்த செவ்வரி ஓடிய அவர்களின் போராட்ட முகத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி இது.
மேற்கு வங்கத்தில் செங்கொடி தாழ்ந்து போன நாள் முதலே இடதுசாரிகள் மிகவும் நொடித்து போய் விட்டனர். இன்று வட கிழக்கில் அவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்... வடக்கிலோ, கால் பதிக்கக் கூட முடியாத நிலை.. பீகாரில் மட்டுமே சற்று உயிர் இருந்தது. இன்று வீறு கொண்டெழுந்துள்ளனர்.
உண்மையிலேயே பீகாரில் இடதுசாரிகள் அசத்தியுள்ளனர்.. காங்கிரஸுடன் ஒப்பிடுகையில், இடதுசாரிகள் எவ்வளவோ பெட்டர்.. இடதுசாரிகளிடமிருந்து கூட காங்கிரஸார் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. ஓசி சவாரி செய்தே பழக்கப்பட்டு விட்ட காங்கிரஸுக்கு இந்த அடி நியாயமானதே.
வெற்றிகள்
கடந்த 2015 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடதுசாரிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் மொத்தமே 3 இடங்கள்தான் கிடைத்தன. அதை சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வென்றிருந்தது. ஆனால் இந்த முறை சிபிஐ, சிபிஎம்மும் கூட கணிசமான வெற்றிகளைப் பெற்று பரவிப் பெருகியுள்ளனர்.
லெனினிஸ்ட்
இதுகுறித்து சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தீபாங்கர் பாட்டச்சார்யா சொல்லும்போது, "இந்த முறை எங்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருந்தது. பீகாரைப் பார்த்து இன்று அனைத்து மாநில மக்களும் உத்வேகம் அடைந்துள்ளனர். இடதுசாரிகள் ஒருங்கிணைந்து மிகப் பெரிய தாக்கத்தை வருங்காலத்தில் ஏற்படுத்துவோம்" என்றார் தீபாங்கர்.
தொகுதிகள்
இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் 29 தொகுதிகளில் போட்டியிட்டன. அதில் 16 தொகுதிகளை வென்று அசத்தியுள்ளன. மிகப் பெரிய வெற்றி இது... சிபிஎம்எம் எல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஐ 2ம், சிபிஎம் 2ம் வென்றுள்ளன.. மொத்தமாக இவர்களின் வாக்கு சதவீதம் 5.5 சதவீதமாக உள்ளது. இது கடந்த தேர்தலை விட 3.5 சதவீதம் அதிகமாகும்.
ஜார்கண்ட்
கடந்த 1995ம் ஆண்டுக்குப் பிறகு இடதுசாரிகள் பீகார் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டிருப்பது இதுதான்... அந்த தேர்தலில் அவர்களுக்கு 38 எம்எல்ஏக்கள் இருந்தனர்... அப்போது ஜார்க்கண்ட் மாநிலமும் பீகாருடன் இணைந்திருந்தது என்பது நினைவிருக்கலாம். மாநிலப் பிரிவினைக்குப் பிறகு இடதுசாரிகள் பீகாரில் வலுவிழந்து வந்தனர்.
முத்திரை
உண்மையில் இடதுசாரிகளின் எழுச்சியாகவே இது பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளின் வெற்றி இன்னொரு விஷயத்தையும் புலப்படுத்தியுள்ளது.. கொள்கை ரீதியாக பிடிப்புள்ளவர்களால் நிச்சயம் முத்திரை பதிக்க முடியும் என்பது அது. அதை விட முக்கியமானது, ஒற்றுமையாக இணைந்து தீவிரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும், இலக்கை நோக்கி பயணிக்கும்போது நிச்சயம் வெற்றி கை கூடும்.. பாஜக இதைத்தான் செய்கிறது.. அதை இடதுசாரிகள் இன்று பிடித்துக் கொண்டு விட்டனர். காங்கிரஸ் என்று இதை கையில் எடுக்கப் போகிறதோ..!