பீகார் 2-ம் கட்ட தேர்தல்: 94 தொகுதிகளில் காலை 9 மணி வரை 8.05% வாக்கு பதிவு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணிவரை மொத்தம் 8.05% வாக்குகள் பதிவாகி உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28-ல் 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 94 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 2.85 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,50,33,034 பேர் ஆண் வாக்காளர்கள்;1,35,16,271 பேர் பெண் வாக்காளர்கள்.
தேர்தல் களத்தில் 1463 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 1316 பேர் ஆண்கள்; 146 பேர் பெண்கள். 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்காக 41,362 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக மகராஜ்கஞ்ச் தொகுதியில் 27 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தாராலு தொகுதியில் 4 பேர் மட்டுமே வேட்பாளர்கள்.
2-ம் கட்ட தேர்தலில் பாஜக 46; ஜேடியூ 43 இடங்களில் போட்டியிடுகின்றன. ஆர்ஜேடி 56; காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிபிஎம்எல் 6, சிபிஎம், சிபிஐ தலா 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எல்.ஜே.பி. மொத்தம் 52 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேஜஸ்வியின் சகோதரர் தேஜ்பிரதாப் களம் காணும் ஹசன்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
7 முறை வெற்றி பெற்ற பீகார் அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ், அமைச்சர்கள் ராம்சேவக் சிங், ராண ரந்தீர் சிங், ஆகியோரது தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications